இந்தி திணிப்பு, மற்றும் ஒன்றிய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புக்கு நுழைவு தேர்வை ஒன்றிய அரசு கட்டாயப்படுத்துவதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர்.வேல்முருகன் தலைமையில் சைதாப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்றார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த பாலகிருஷ்ணன் இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி, அலுவல் மொழி என்பதை இந்திய நாடு ஏற்றுக்கொள்ளாது. இந்திய அரசியல் சாசனம் சட்டம் ஏற்றுக்கொள்ளாத இந்தியை படிப்படியாக திணிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது. ஒன்றிய அரசு நீட் தேர்வு மட்டுமல்லாது அனைத்து படிப்புகளுக்கு படிப்படியாக நுழைவுத் தேர்வை கொண்டு வந்தால் சாதாரண ஏழை எளிய தாழ்த்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினர் மாணவர்கள் கோட்சிங் சென்டருக்கு சென்று படிக்க முடியாதவர்கள் நுழைவுத்தேர்விலே உரிய மதிப்பெண்களை பெற முடியாமல் பல்கலைக்கழக படிக்கட்டுகளை மிதிக்கும் வாய்ப்பே இல்லாமல் போகும் அபாயம் உள்ளது எனவே மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய பல்கலைக்கழகங்களில் நுழைவுத் தேர்வை திணிக்கும் நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்க்கிறது என்றார். மேலும் இளையராஜாவின் மோடி அம்பேத்கர் ஒப்பீடு குறித்து கேள்விக்கு பதில் அளித்த கே.பாலகிருஷ்ணன், இளையராஜா சிறந்த இசைஞானி என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவர் மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிட்டு பேசுவது எந்த விதத்திலும் பொறுத்தமற்றது. நேர்மையற்றது. நியாயமற்றது. ஏதோ ஒரு அரசியல் உள்நோக்கத்தோடு இளையராஜா பேசி உள்ளார் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.