சென்னை, ஜூலை 3- தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்காது என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரி வித்துள்ளார். மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் தமிழகத்தில் எரி வாயு எடுக்கும் எந்த திட்டத்தையும் மத்திய அரசால் செயல்படுத்த முடி யாது என்றும் மேலும் அவர் கூறி னார். தமிழக சட்டப்பேரவையில் புத னன்று (ஜூலை 3) கேள்வி நேரம் முடிந்ததும், தமிழகத்தில் மேலும் சில இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய அரசு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது குறித்து திமுக உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசுகையில், “ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக மக்களும் எதிர்க்கட்சிகளும் ஒருமித்த மன நிலையோடு எதிர்த்து வருகின்றனர். மாநில அர சுக்கும் இதில் மாறுபட்ட கருத்து கிடையாது. எனவே, இந்த திட்டத்தை நமது மண்ணில் புகுத்தக் கூடாது” என்றார். அண்டை மாநிலமான கேரளாவை போல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா மாவட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதில் அளித்த சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம், “காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் மூலம் மீத்தேன் எரிவாயு எடுப்பது, மரபு சாரா கனிமங்களை எடுப்பது தொடர் பாக மத்திய அரசு 2016-ல் புதிய கொள்கை அறிவிப்பையும் எண்ணெய் வளம் உள்பட அனைத்து வித மான இயற்கை வளங்களை ஒரே நிறுவனம் எடுக்கவும் ஒரு அறிவிப்பை இணையதளத்தில் வெளியிட்டது” என்றார். தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசால் ஓ. என்.ஜி.சி., வேதாந்தா ஆகிய இரு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப் பட்டது. ஆனால் தமிழக அரசு இது வரையிலும் இந்த திட்டங்களுக்கு எந்தவித அனுமதியும் வழங்க வில்லை என்றும் டெல்டா பகுதியில் விவசாய நிலங்களை அழித்து செயல் படுத்த திட்டமிடப் படும் எந்த ஒரு திட்டத்துக்கும் தமிழக அரசு ஒரு போதும் அனுமதி அளிக்காது என்றும் அமைச்சர் கூறினார். “கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கலாம். ஆனால் நிலப் பரப்பில் மாநில அரசின் ஒப்புதல் பெற்றே எதையும் செய்ய முடியும். ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்பட எந்த திட்டத்துக்கும் தமிழக அரசு தனது ஒப்புதலை இன்று வரை வழங்கவில்லை.
இனி எப்போதும் வழங்காது. ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஏற்கனவே ஹைட்ரோ கார்பன் எடுக்க தமிழக அரசிடம் விண்ணப்பித்தது. ஆனால் அதற்கு தமிழக அரசு அனு மதி கொடுக்கவில்லை. தமிழக அரசு இந்த ஹைட்ரோகார்பன் திட்டத் துக்கு அனுமதி கொடுத்துவிட்டதாக கூறப்படுவது தவறானது. தமிழக விவ சாயத்தை பாதிக்கும் இதுபோன்ற எந்த ஒரு திட்டத்திற்கும் இப்போது மட்டுமல்ல; இனி எந்தக் காலத்திலும் அனுமதி வழங்காது” எனவும் அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.
விவசாயிகள் சங்கம் வரவேற்பு
ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பான தமிழக அரசின் இந்த நிலையை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள செய்தியில், “ஏற்கனவே, முதலமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதா 8.10.2015 அரசாணை எண்.186 மூலம் மீத்தேன் எடுக்க தடைவிதித்து உத்தரவிட்டிருந்தார். ஆனால், மத்திய அரசு தொடர்ந்து ஆய்வுப் பணி கள் மேற்கொள்வது, ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல்கேஸ், நிலக்கரி உள்ளிட்டவற்றை எடுப்ப தற்கு எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏலம் விடுவது போன்ற பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்பதை தமிழக அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம். மத்திய அரசின் இத்தகைய நட வடிக்கைகளை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது. தமி ழகத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் மிக முக்கியமான இந்த பிரச்சனை குறித்து சட்டப்பேரவை யில் எழுப்பிய திராவிட முன்னேற்ற கழகத்திற்கும், விவசாயிகள் நலனை பாதுகாக்கும் வகையில் உறுதி யளித்த தமிழக அரசுக்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் காவிரி படுகை விவசாயிகள் மத்தியில், நமது நிலம் பறிக்கப்பட்டு காவிரிப் படுகை பாலைவனமாகிவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதை போக்கிடும் வகையில், காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மாக அறிவித்து தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறை வேற்றிட தமிழக அரசு முன்வர வேண்டும்” என்று கூறியுள்ளார்.