tamilnadu

img

தொற்று நோய்க்கு மதச்சாயம் பூசி, வெறுப்பு பிரச்சாரம் செய்யும் தமிழக பாஜகவினருக்கு கண்டனம்

சென்னை,ஏப்.1- வைரஸ் தொற்றுநோய்க்கு மதச்சாயம் பூசி,வெறுப்பு பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விடும் தமிழக  பாஜக தலைவர்களுக்கு தமிழக  மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் அருணன், க. உதயகுமார் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: கொரோனா எனும் கொடூரம் உலகத்தையே தாக்கி வருகிறது. அதற்கு நாடு, இனம், மதம், சாதி வித்தியாசம் எல்லாம் கிடையாது. இந்த உலகளாவிய ஆபத்தை உலகளாவிய அளவில் எதிர்த்து நிற்க வேண்டும். ஆனால் மத்திய ஆளுங்கட்சியாகிய பாஜகவின் தமிழக தலைவர்கள்  தொற்றுநோய்க்கும் மதச் சாயம் பூசப் பார்க்கிறார்கள். தில்லியில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டை சுட்டிக்காட்டி முஸ்லிம்களே கொரோனா பரவலுக்குக் காரணம் என்பதுபோல ஒரு வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார்கள்.

இதை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வன்மையாகக் கண்டிக்கிறது. தில்லி மாநாட்டில் பங்கு கொண்ட சிலருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் அதில் பங்குகொண்ட இதரரையும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவருவது அவசியமே. ஆபத்தை உணர்ந்து அவர்களே தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் நியாயமே. மக்கள் ஒற்றுமை மேடையும் அந்த வேண்டுகோளை உரிமையோடு முன்வைக்கிறது. ஆனால் இதைச் சாக்கிட்டு தமிழக பாஜக தலைவர்களும் இதர சங் பரிவாரமும் நடத்துவது வகுப்புவாத பிரச்சாரமாகும். நோயைப் பரப்பவே தப்லீக் ஜமாத்தானது மாநாட்டை  நடத்தியது, அதன் பெயர் "கொரோனா ஜிகாத்" என்று கூச்சமின்றி கூறுகிறார்கள். தங்களது மத மாநாட்டில் தெரிந்தே தொற்று நோயைக் கொண்டு வருவார்களா? அதனால் ஆபத்து தங்களுக்குத்தான் என்பதை அவர்கள் அறியார்களா? சங்பரிவாரிகள் தர்க்கநியாயம் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார்கள், இவர்களது நோக்கம் எப்படியாகிலும் மதப்பகைமையை ஊட்டுவதுதான் என்பதை இந்த அவதூறு உணர்த்துகிறது. இதன் நோக்கம் மோடி அரசு செய்த மன்னிக்க முடியாத காலதாமதத்தை மறைப்பதாகும்.

இந்தியாவில் முதல் கொரோனா பாதிப்பு அறியப்பட்டது ஜனவரி 30 இல். பிப்ரவரி முதல் வாரத்திலேயே வெளிநாட்டவரின் வருகையை தடுத்திருந்தால், வெளிநாடுகளிலிருந்து வரும் இந்தியர்களை தனிமைப்படுத்தியிருந்தால் இன்றைக்கு ஏற்பட்டுள்ள கொரோனா பரவலை வெற்றிகரமாகத் தடுத்திருக்க முடியும். அதைச் செய்யத்தவறியது மத்திய பாஜக அரசு. நாட்டின் பிரதமர் மார்ச் 22 இல்தான் ஒருநாள் ஊரடங்கை நடத்தினார். அதற்கும் பிறகுதான் 21 நாள் ஊரடங்கு. இடைப்பட்ட காலத்திலும் போதிய முன்தயாரிப்புகள் இல்லை என்பதை தில்லி மக்கள் ஆயிரக்கணக்கில் கால்நடையாக சொந்த ஊருக்கு கிளம்பியது உணர்த்தியது. இந்தக் காலத்தில்தான்  தப்லீக் மாநாடு மட்டுமல்ல, டிரம்பை வரவேற்க ஆயிரக்கணக்கான மக்களை திரட்டியதும் நடந்தது, கோவையின் ஈசா மையத்தில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினரோடு பல்லாயிரக்கணக்கானோர் பங்கு கொண்ட சிவராத்திரி விழாவும் நடந்தது. இவற்றால் எல்லாம் நோய் தொற்று எந்த அளவுக்குப் பரவியதோ தெரியாது.

இன்று செய்ய வேண்டியது கொரோனா பரிசோதனையை அறிகுறி உள்ள அனைவருக்கும் இலவசமாக நடத்துவது, அதற்கான கூடங்களை அதிகப்படுத்துவது, நோய் உறுதி செய்யப்பட்டவர்களுக்கு தரமான சிகிச்சைக்குத் தேவையான வென்டிலேட்டர் போன்ற கருவிகளை வழங்குவது, ஊரடங்கால் அவதிப்படும் கோடிக்கணக்கான அன்றாடங் காய்ச்சிகளுக்கு உரிய இழப்பீடு தருவது இத்யாதிகள். இதில் கவனம் செலுத்தாமல் ஆளுங்கட்சியே மதமாச்சரியத்தைத் தூண்டுவது ஈவிரக்கமற்ற காரியமாகும். வகுப்புவாதம் எனும் வெறுப்புவாதமும் ஒருவகை கொரோனாவே, அதனிடமிருந்தும் மக்கள் விலகி நிற்க வேண்டும்.  உடல் நோயிலிருந்து மட்டுமல்லாது உள்ளத்து நோயிலிருந்தும் தப்பிக்க இந்த விலகல் அவசியம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.