குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்திகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியாவில் உள்ள மாநிலங்களின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் குடியரசு அணிவகுப்பில் ஊர்திகள் பங்கேற்பது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தின் முக்கியமான சுதந்திரப் போராட்ட தலைவர்களான வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார், தேசியக்கவி பாரதியார் ஆகியோரின் படங்கள் இடம்பெறும் வகையில் தமிழக அரசு முடிவு செய்து ஒன்றிய அரசுக்கு அனுப்பியிருந்தது. இதுவரை நான்கு சுற்று ஒத்திகைகள் முடிவடைந்துள்ள நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள் இடம்பெற்ற அலங்கார ஊர்தி பங்கேற்க அனுமதியில்லை என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஒன்றிய பாஜக அரசின் இச்செயல் தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களையும், ஒட்டுமொத்த தமிழகத்தையும், தமிழக மக்களையும் அவமதிக்கும் செயலாகும். ஒன்றிய பாஜக அரசின் இந்நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
மேலும் தென்மாநிலங்களில் பாஜக ஆளும் கர்நாடக அரசின் ஊர்தியை மட்டும் அனுமதித்துவிட்டு, இதர அனைத்து மாநில ஊர்திகளுக்கு அனுமதி மறுத்துள்ளது முறையற்றது. கண்டனத்திற்குரியது. எனவே, ஒன்றிய பாஜக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படாமல் மாநில பெருமைகளை பறைசாற்றும் தமிழகத்தின் அலங்கார ஊர்திகள் உள்ளிட்டு அனைத்து மாநில ஊர்திகளும் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.