திருபுவனை கூட்டுறவு வங்கியில் முறைகேடு!
பதிவாளர் அலுவலகம் முன்பு போராட்டம்
புதுச்சேரி,மே 13- திருபுவனை கூட்டுறவு வங்கி முறை கேடு கண்டித்து கூட்டுறவு பதிவாளர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. புதுச்சேரி திருபுவனை கூட்டுறவு விவசாயிகள் சேவை வங்கியில் வைப்பு தொகை வைத்துள்ள விவசாயிகளுக்கு வைப்புத் தொகை முதிர்வடைந்தும் பணத்தை திருப்பித் தராமல் அலைகழிக்கும் அதிகாரிகளை கண்டித்தும் விவசாயிகளின் பணத்தை ஊழல் முறைகேடு செய்துள்ள வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இப்போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி விவிபி நகர் கூட்டுறவு பதிவாளர் அலுவலகம் அருகில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மண்ணாடிப்பட்டு கமிட்டி செயலாளர் ரகு.அன்புமணி தலைமை தாங்கினார். மாநிலச் செயலாளர் எஸ்.ராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினர் இரா. ராஜாங்கம், மாநிலக் குழு உறுப்பினர்கள் சங்கர், மதி வாணன், கமிட்டி உறுப்பினர்கள் நாகராஜ், கந்தநாதன், விநாயகம், முத்து, பாரதி மற்றும் பலர் பேசினர்.