அம்பத்தூர், ஜூலை 13- அம்பத்தூர் அருகே போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.90 லட்சம் நிலத்தை அபகரித்த வழக்கில் இளைஞர் ஒருவரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.
செங்கல்பட்டு அருகே விளம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இப்ராஹிம் (76). இவர் கடந்த 1981ஆம் ஆண்டு முதல் அம்பத்தூர் அருகே கொரட்டூர், பாலாஜி நகர் 2,420 சதுரடி நிலத்தை அனுபவத்தில் வைத்துள்ளார். இதற்கிடையில் இப்ராஹீமை தனது தந்தை எனக் குறிப்பிட்டு, அவர் இறந்து விட்டதாக அப்துல்ரகுமான் என்பவர் போலியான இறப்பு மற்றும் வாரிசு சான்றிதழ் பெற்று 2022ஆம் ஆண்டு தனது மனைவி ஹசீனா பெயரில் போலியான தான செட்டில்மெண்ட் எழுதி, அதனை சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்துள்ளார்.
அதன் பிறகு, அதனை விற்பனை செய்ய பிரகாஷ் என்பவருக்கு அப்துல்ரகுமான் பொது அதிகாரம் கொடுத்துள்ளார். பின்னர் அவர் செஞ்சம்மாள் என்பவருக்கு நிலத்தை விற்பனை செய்துள்ளார். இந்த நிலத்தின் மதிப்பு ரூ.90 லட்சம் எனக் கூறப் படுகிறது. போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரித்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்த இப்ராஹிம், ஆவடி காவல் ஆணையரகத்தில் சமீபத்தில் புகார் அளித்தார். ஆணையர் கி.சங்கர் புகார் மனுவை, ஆவடி மத்திய குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். நிலப் பிரச்சினை தீர்வு பிரிவு காவல் ஆய்வாளர் ஜெய்சங்கர் தலை மையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, அம்பத்தூர் அருகே கள்ளிகுப்பம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (28) என்ப வரை சனிக்கிழமை கைது செய்தனர். போலீசார் அவரை பூந்தமல்லி நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.