tamilnadu

img

பரந்தூர் விமான நிலைய பணிக்கு 2025 மார்ச்சில் `டெண்டர்’

சென்னை, ஆக. 13 - சென்னையில் 2-ஆவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ளது. சுமார் 32 ஆயிரத்து 704 கோடி செலவில் 2 ஆயிரத்து 171 ஹெக்டேர் நிலப்பரப்பில் இந்த விமான நிலையம் அமைகிறது.

இதில் 1386 ஹெக்டேர் விவசாய நிலம், 577 ஹெக்டேர் நீர் நிலைகள் மற்றும் 173 ஹெக்டேர் அரசு மற்றும் புறம்போக்கு நிலங்கள் ஆகும். இதற்கான முறையான அனுமதி கிடைத்ததும், விமான நிலையப் பணிக்கு டெண்டர் அடுத்த ஆண்டு (2025) தொடக்கத்தில் விடப்படும் என்று கூறப்படுகிறது.

விமான நிலையத்திற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்புகள் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கான தொழில்நுட்ப திட்ட பொருளாதார அறிக்கைகள் தயாரித்து மாநில அரசிடம் வழங்கப்பட்டது. இந்த அறிக்கை ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது. விமான நிலைய பணிக்கு ஒன்றிய அரசிடம் இருந்து கொள்கை ரீதியான ஒப்புதல் கிடைத்ததும் டெண்டர் வெளியிடப்படும். இதற்காக விரைவில் அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் டெண்டர் விட திட்டமிட்டுள்ளனர். அதற்குள் விமான நிலையத்திற்கு தேவையான நிலங்கள் அனைத்தையும் கையகப்படுத்தும் பணியை முழுமையாக முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.