சென்னை, மார்ச் 30 - இந்தியா இந்தியாவாக இருக்க, இந்தியா கூட்டணி வெல்ல வேண்டும் என்று திமுக இளைஞரணி செயலாள ரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கூறினார். இந்தியா கூட்டணி சார்பில் திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு போட்டியிடுகிறார்.
அவருக்கு வாக்கு கேட்டு வெள்ளி யன்று (மார்ச் 29) பல்லாவரம், தாம்பரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதன் சுருக்கம் வருமாறு: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையின்படி 8ஆம் வகுப்பு, 5ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் பொதுத்தேர்வு எழுத வேண்டும்.
நம்முடைய பிள்ளைகள் படிக்கக் கூடாது என்பதற்காகவே இந்த திட்டத்தை பாஜக அரசு கொண்டு வருகிறது. சிலிண்டர், பெட்ரோல் விலைகளை உயர்த்திக் கொண்டே இருந்த ஒன்றிய அரசு, தேர்தல் வந்தவுடன் விலைகளை குறைப்பது போல் நடிக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் ரூ. 500 குறைக்கப்படும்.
பெட்ரோல் விலை லிட்டர் ரூ.75 க்கும், டீசல் ரூ.65 வழங்கப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளும் அகற்றப்படும். ரூ.62 ஆயிரத்து 791 கோடியில் திருபெரும்புதூரில் தொழில் தொடங்க 40 நிறுவனங்கள் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன.
அந்த திட்டங்களை விரைந்து செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அம்பத்தூர், ஆவடி, ஒரகடம், திருப்பெரும்புதூர், கூடுவாஞ்சேரி ரயில் பாதைகள் அகலப்படுத்தப்படும். மீனம்பாக்கம் - கிளாம்பாக்கம் இடையே மெட்ரோ ரயில் நீட்டிக்கப் படும். மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் பாலப் பணிகள் விரைந்து முடிக்கப்படும். அதற்கு டி.ஆர்.பாலு வெற்றி பெற வேண்டும். இந்தியா இந்தியாவாக இருக்க அனைத்து தொகுதிகளிலும் இந்தியா அணி வெல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.