திருவண்ணாமலை,ஜன.24- திருவண்ணாமலை அடுத்த செ.அகரம் கிராமத்தில் வீட்டின் மீது மின் கம்பம் விழுந்து வீடு சேதமானது.வீட்டின் சேதமான பகுதியில் சம்பவ நேரத்தில் யாரும் இல்லாததால், உயிர் சேதம் ஏற்படவில்லை. செ.அகரம் கிராமம் பழைய காலணி 2 வது தெருவில் வசிக்கும் முனியன் என்பவர் வீட்டின் மீது அருகிலிருந்த மின் கம்பம் வியாழனன்று(ஜன.23) விழுந்தது. மேலும், இதே போன்று சேதமான சில மின் கம்பங்கள் உள்ளதாகவும், அது பற்றி, மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், கிராம மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். மின் கம்பம் விழுந்து சேதமான பகுதியில், ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஊர் பொது மக்கள் பார்வையிட்டு உடனடியாக மின் இணைப்பை துண்டிக்கச் செய்தும், இடிபாடுகளை அகற்றவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். உடனடியாக அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் கம்பத்தை அகற்றி சேதமான மின் கம்பங்களை மாற்றி வருகின்றனர்.