சென்னை:
இந்திய தேர்தல் ஆணைய பொதுச் செயலாளர் உமேஷ் சின்கா தலைமையிலான உயர்மட்ட குழு திங்களன்று (டிச.21) சென்னை வருகிறது.தமிழக சட்டப்பேரவையின் பதவி காலம் வருகிற மே 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையொட்டி வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் பேரவை பொதுத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
தமிழக தேர்தலுடன் புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த 5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி விட்டது.இதற்காக 2021ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள் ளன. 18 வயது நிரம்பியவர்களை புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.வருகிற ஜனவரி மாதம் 5 ஆம் தேதி புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இவை தவிர ஒவ் வொரு மாநிலத்துக்கும் தேவையான மின்னணு ஓட்டுப் பதிவு எந்திரங்களை தயார் செய்வது, கூடுதல் வாக்குச் சாவடிகளை உருவாக்குவது உள் ளிட்ட பணிகளிலும் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது.தற்போது கொரோனா காலமாக உள்ளதால் தனி மனித இடைவெளியை கடை பிடிக்கும் வகையில் வாக்காளர்களுக்கு நோய் தொற்று ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு வழிமுறைகளுடன் தேர்தலை நடத்த வேண்டி உள்ளதால் அதற்கேற்ப கூடுதலாக வாக்கு சாவடிகளை உருவாக்குவது பற்றியும் தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.
தேர்தலுக்கு இன்னும் 4 மாதமே உள்ளதால் தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவதா? அல்லது 2 கட்டமாக நடத்துவதா? என்பது குறித்தும் தேர்தல் ஆணையம் முடிவு செய்ய உள்ளது.இதற்காக பொதுத் தேர்தல் நடைபெறும் தமிழகம் உள்பட 5 மாநிலத் துக்கும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்று ஆலோசனை நடத்த உள்ளனர். அப்போது அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் கருத்து கேட்க உள்ளனர்.
5 மாநிலங்களில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு தேர்தலுக்கு எவ்வளவு போலீஸ் பாதுகாப்பு தேவைப்படும் என்பது பற்றியும் அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளிடம் விரிவாக ஆலோசனை நடத்த உள்ளனர்.இதற்காக 5 மாநிலத்துக்கும் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் திங்களன்று (டிச. 21) செல்கிறார்கள்.அதன்படி இந்திய தேர்தல் ஆணைய பொதுச் செயலாளர் உமேஷ் சின்கா தலைமையிலான உயர்மட்ட குழு தமிழகம் வருகிறது. துணை தேர்தல் ஆணையர்கள் சுதீப்ஜெயின், ஆசிஸ்குந்த்ரா, பீகார் தலைமை தேர்தல் அதிகாரி எச்.ஆர்.சீனிவாசா, தேர்தல் ஆணைய இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவத்சவா, தேர்தல் ஆணைய செயலாளர் மலையாய் மாலிக் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.இவர்கள் அனைவரும் தில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார்கள். அவர்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விமான நிலையம் சென்று வரவேற்கிறார்.பின்னர் இந்த குழுவினர் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா ஓட்டலுக்கு செல்கிறார் கள். அங்கு பகல் 12 மணிக்கு அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனை நடத்துகிறார்கள்.தமிழகத்தில் ஏப்ரல் மாதம் தேர்தலை ஒரே கட்டமாக நடத்தலாமா? அல்லது 2 கட்டமாக நடத்தலாமா? என்பது பற்றி ஒவ்வொரு கட்சி பிரதிநிதிகளிடமும் தனித்தனியாக கருத்து கேட்கிறார்கள்.
அப்போது ஒவ்வொரு கட்சி பிரதிநிதிகளும் கொடுக்கும் மனுக்களையும் பெற்று கொள்கிறார்கள்.அதன் பிறகு தேர்தல் ஆணைய அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்கள். வருமான வரித்துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடைபெறுகிறது.இந்த கூட்டம் முடிந்ததும் 22ஆம் தேதி தமிழக அரசின் உயர் அதிகாரிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்கள். இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் உள்துறை செயலாளர், காவல்துறை டி.ஜி.பி., சென்னை ஆணையர், உளவுப் பிரிவு அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.தமிழகத்தில் தேர்தல் நடத்த என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் விளக்கி கூற உள்ளனர்.சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள், பொது பிரச்சினைகள், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கிறார்கள்.அதன் பிறகு செய்தியாளர்களை சந்திக்கிறார்கள். அப்போது தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து விரிவாக பேச உள்ளனர். அதன் பிறகு தில்லி செல்கிறார்கள்.