tamilnadu

img

கொரோனா தொற்று காலத்தில் வீட்டிலிருந்தே பணிபுரிபவர்கள் வாக்காளர் பட்டியலில் விடுபடாமல் இருக்க நடவடிக்கை எடுத்திடுக... தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் சிபிஎம் வலியுறுத்தல்...

சென்னை:
கொரோனா தொற்று காலத்தில் வீட்டிலிருந்தே பணிபுரியும் தொழில்நுட்பம் சார்ந்தபணிகளில் உள்ளவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுதலைமைத் தேர்தல் அதிகாரியிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மாநிலக்குழு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:நவம்பர் 3 அன்று தலைமைச் செயலக வளாகத்தில் தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி அழைப்பின் பேரில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கூட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.ஆறுமுக நயினார் மற்றும்வெ.ராஜசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலை, ஜனவரி 1, 2021 - ஐ தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு திருத்தி அமைப் பது சம்பந்தமாக தேர்தல் ஆணையம் எடுத்திருக்கக் கூடிய நடவடிக்கைகள் குறித்து தலைமைத்தேர்தல் அதிகாரி விளக்கினார். இதன்மீது கட்சிகளின் கருத்தையும் கேட்டறிந்தார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கொரோனா தொற்று காரணமாக கணினி மற்றும் ஐ.டி துறைகளிலிருந்து தங்களுடைய சொந்த ஊர்களுக்கு இடம் பெயர்ந்து வீட்டிலிருந்தே பணி செய்யக்கூடிய லட்சக்கணக் கான ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடைய பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபடும் ஆபத்து இருக்கிறது. அவை விடுபடாமல் இருப்பதற்கு தேர்தல்ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் உள்ள புகைப்படம் மிகத்தெளிவாக இருக்க வேண்டும். வாக்காளர் சேர்ப்புக்கான சிறப்பு முகாம்கள் (நான்கு நாட்கள்) நடைபெறுவது குறித்துதொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகள் வாயிலாக விளம்பரங்கள் கொடுத்து இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளச் செய்யவேண்டும். கொரோனா காலத்தில் வாக்காளர்கள் மத்தியில் ஒருவித அச்சம் உள்ளது. அனைவரும் வாக்களிக்கும் வகையில் மக்களின் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண் டும். இவ்வாறு வலியுறுத்தப்பட்டது.