tamilnadu

பொருளாதார மந்த நிலையால் மோட்டார் விற்பனையில் தேக்கம்

சென்னை,டிச 11 பொருளாதார மந்தநிலை இருசக்கர மோட்டார் விற்பனையில் எதிரொலிக்கிறது. தொடர்ந்து அனைத்து நிறுவனங்களின் வாகனங்களின் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய யமஹா மோட்டார் இந்தியாவின் தெற்கு  பிரிவு துணைத்தலைவர் (விற்பனை) எம்.எஸ்.ராம்குமார்,பொருளாதார மந்த நிலையால் விற்பனை சற்று குறைந்துள்ளது. இது பொதுவாக எல்லா நிறுவனங்களிலும் உள்ளது. அதுவே இங்கும் எதிரொலிக்கிறது என்றார். பொருளாதார மந்த நிலை மறையும் போதுதான் விற்பனை சூடுபிடிக்கும் என்றும் அதுவரை இந்தநிலை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார். இருப்பினும் யமஹா மோட்டார் வாகனம் தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்து க்கொள்வதற்காகவும் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் பல்வேறு புதிய யுக்திகளில் ஈடுபட்டுள்ளது என்றார். அதன் ஒருபகுதியாக சர்வதேச தரத்தில் விற்பனை மையங்களை வடிவமைத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக  இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை அண்ணாசாலை நந்தனத்தில் “ப்ளு ஸ்கொயர்’’ என்ற பிரத்யோக விற்பனை மையத்தை திறந்துள்ளது. இங்கு யமஹா மோட்டார் நிறுவனத்தில் தயாராகும் பிரீமியம் பைக்குகள், ஸ்கூட்டர்கள், உதிரிபாகங்கள், தலைக்கவசம், டீ சர்ட்டுகள் கிடைக்கும் என்றும் அவர் கூறினார். 2020ஆம்  ஆண்டில் இந்தியாவில் 100 ப்ளு ஸ்கொயர்  மையங்களை அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.