tamilnadu

வடசென்னையில் வளர்ச்சிப்பணிகள் தீவிரம்

சென்னை, ஜூலை 14- வடசென்னையில் 100க்கும் மேற்பட்ட வளர்ச்சிப்பணிகள் தீவிரமாக  நடைபெற்று வருவதாக  அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில்  பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எம்.கே.பி. நகர் சென்ட்ரல் அவென்யூ சாலையில் புதிதாக அமைய உள்ள சமுதாய நலக்கூடம், ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இளைய முதலி தெருவில் அமைய வுள்ள விளையாட்டுத் திடல், திருவொற்றியூரில்  அமைய உள்ள சமுதாய நலக்கூடம், மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புழல் ஒன்றியம், விளாங்காடுபாக்கத்தில் அமையவுள்ள பன்னோக்கு மையம், சென்னை வில்லிவாக்கம் அகத்தியர் நகரில் அமையவுள்ள சிறுவர் விளை யாட்டுத் திடல் ஆகியவற்றை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஞாயிறன்று  ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வடசென்னை வளர்ச்சி திட்டத்தில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் மேற் கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து தொடர் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

வடசென்னையில் மொத்தம் 219 திட்டங்கள் 43,78 கோடி செலவில்  மேற் கொள்ளப்பட உள்ளன. அதில் தற்போது 100 பணிகள் நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 119 பணிகள் வெகு  விரைவில் திட்ட அறிக்கை தயாரிக்கப் பட்டு ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கபடும் என்றார்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையில் உள்ளது. யார் தவறு  செய்திருந்தாலும் அவர்கள் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும். குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றார்.

இதில் வடசென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே.ஜே.எபினேசர், ஆர்.டி.சேகர், மாதவரம் எஸ்.சுதர்சனம், வெற்றியழகன், மேயர்  ஆர்.பிரியா, மண்டல குழு தலைவர்கள்  நேதாஜி யு கணேசன் தி.மு. தனியரசு, வீட்டு வசதி முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, வடக்கு வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, மத்திய வட்டார துணை ஆணையர் கே.ஜெ.பிரவீன் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.