கேளம்பாக்கம், நாவலூரில் புதிய சார்பதிவகங்கள் உருவாக்கம்
திருப்போரூர், ஜூலை 31- திருப்போரூர் சார்பதிவகம் மூன்றாக பிரித்து கேளம்பாக்கம், நாவலூரில் புதிய சார்பதிவகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. திருப்போரூர் தெற்கு மாடவீதியில் கடந்த 1886ம் ஆண்டு முதல் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள நாவலூர், படூர், கேளம்பாக்கம், தையூர், திருப்போரூர், இ.சி.ஆர். சாலையில் உள்ள கானத்தூர், முட்டுக்காடு, கோவளம், திருவிடந்தை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் சொத்து ஆவணங்களை பதிவு செய்வதற்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்த அலுவலகத்தை நான்காக பிரிக்க பதிவுத்துறை முடிவு செய்து, அரசுக்கு கருத்துரு அனுப்பியது. இதையடுத்து திருப்போரூர் அலுவலகத்தை திருப்போரூர், வண்டலூர், நாவலூர், கேளம்பாக்கம் ஆகிய 4 அலுவலகங்களாக பிரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு, தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்ததை அடுத்து தற்போது முதற்கட்டமாக வியாழனன்று நாவலூர் மற்றும் கேளம்பாக்கம் ஆகிய இரண்டு அலுவலகங்கள் திறந்து வைக்கப்படுகின்றன. தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 புதிய சார்பதிவகங்களையும் திறந்து வைத்தார்.