tamilnadu

img

பல்கலைக் கழகம் ஒன்றிற்கு சிங்காரவேலர் பெயரை சூட்டுக! - சிபிஎம் கோரிக்கை

தமிழகத்தில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்திற்கு சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலர் பெயரை சூட்ட வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்  கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடி சிந்தனை சிற்பி தோழர் ம.சிங்காரவேலரின் 77வது நினைவு தினம் சனிக்கிழமையன்று (பிப்.11) அனுசரிக்கப்பட்டது.

இதனையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், “தமிழகம் சந்தித்த அனைத்து வகையான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்தவர் தமிழகத்தின் தலைசிறந்த சிந்தனையாளர் சிந்தனை சிற்பி சிங்காரவேலர். முதல் தலைமுறை மார்க்சிய சிந்தனையாளர்களில் சிங்காரவேலர் குறிப்பிடத்தக்கவர். இந்தியாவின் முதல் தொழிற்சங்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவர். ஆசியாவிலேயே முதன்முதலில் மெரினா கடற்கரையில் செங்கொடி ஏற்றி மே தினத்தை கொண்டாடியவர். பகுத்தறிவு பிரச்சாரத்தோடு, சமதர்ம பிரச்சாரத்தையும் செய்ய வேண்டும் என்று பெரியாரை ஏற்க வைத்தவர் சிங்காரவேலர்” என்றார்.

“கம்யூனிஸ்ட்டுகள் மீது போடப்பட்ட முதல் சதி வழக்கான, கான்பூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்டவர் சிங்காரவேலர். பல்வேறு அடுக்குமுறைக்கு உள்ளானபோதும், சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க, விஞ்ஞான கண்ணோட்டத்தை வழங்கியவர். நகர்மன்ற உறுப்பினராக இருந்தபோது மதிய உணவு திட்டத்தை சிங்காரவேலர் உருவாக்கினார். அது படிப்படியாக வளர்ந்து மதிய உணவு திட்டம், சத்துணவு திட்டம், காலை உணவு திட்டமாக பரிணமித்துள்ளது” என்றும் அவர் கூறினார்.

“விடுதலைப்போராட்ட வீரர், சிறந்த மார்க்சியவாதி, பகுத்தறிவுவாதி என சிறப்பு வாய்ந்த அவரை பெருமைப்படுத்தும் வகையில், ஒரு பல்கலைக் கழகத்திற்கு சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலர் பெயரை அரசு சூட்ட வேண்டும். மேலும், மெரினா கடற்கரையில் உள்ள லேடி வெலிங்டன் வளாகத்திற்கு, சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சூட்ட வேண்டும்”என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்தார்.

இந்நிகழ்வின்போது கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மாநிலக்குழு உறுப்பினர் வெ.ராஜசேகரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.திருவேட்டை, வே.ஆறுமுகம், பகுதிச் செயலாளர்கள் ஜலாலுதீன் (துறைமுகம்), கவிதா கஜேந்தின் (சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.