சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி சாடல்
சென்னை, ஜூன் 2- கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பாற்றுவதில் மத்திய, மாநில அரசுகள் தோல்வி அடைந்துள்ளன. சிகிச்சை மற்றும் மரணப் புள்ளி விவரங்களை குறைத்துக் காட்டி நல்ல பெயர் எடுக்க முயற்சிப்பது மோசமான முன்னுதாரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி சாடியுள்ளார். சென்னையில் கொரோனா பரவலை தடுக்க அதிகளவு பரிசோதனைகளை நடத்தி சிகிச்சை அளிக்க வலியுறுத்தி செவ்வாயன்று (ஜூன் 2) பேசின்பாலம் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக்குழு சார்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் உ.வாசுகி பேசியதாவது:
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசும், மாநகராட்சியும் எடுக்கும் நடவடிக்கை போதுமானதாக இல்லை. பரிசோதனை எண்ணிக்கை மிகக்குறைவாக இருக்கிறது. மக்கள் தொகையின் எண்ணிக்கைக்கும் பரிசோதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கைக்கும் பெரும்இடைவெளி உள்ளது. இது சர்வதேச வழிகாட்டுதலுக்கு எதிரானது. மாநில வாரியாக பரிசோதனைகள் குறித்த புள்ளி விவரங்கள் கொடுக்கப்படுகிறது. மாவட்டம் வாரியாக வழங்குவதில்லை. குடும்பத்தில் ஒருவருக்குதான் பரிசோதனை செய்யப்படும் என்பது சரியானதல்ல. இதனால், கொளத்தூரில் சசிகலா என்ற களப்பணியாளர் பலியாகியுள்ளார். அறிகுறி இல்லாத நோயாளிகள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று மாநகராட்சி வற்புறுத்துகிறது. இதனால் பொதுமக்கள் இடையே சமூக பதட்டம் ஏற்படுகிறது. இது சட்டம் ஒழுங்கை பாதிக்கிறது. அறிகுறி இல்லாவிட்டாலும் மருத்துவர்கள் மட்டுமே சிகிச்சை அளிக்க வேண்டும்.
வர்த்தக மையம், அம்பத்தூர் பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்துத்தரப்படவில்லை. ஆகவே, நோயாளிகளை மருத்துவமனையில் மட்டுமே வைத்து கிசிச்சை அளிக்க வேண்டும், தனியார் மருத்துவமனைகள் இந்த தொற்றை பயன்படுத்தி மக்களிடம் பணத்தை பிடுங்குகின்றன. எனவே, தற்காலிகமாக தனியார் மருத்துவமனைகளை மாநில அரசு தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது சிகிச்சை அளிக்கவேண்டும். கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நிபுணர்களின் ஆலோசனைகள் மட்டும் போதுமானதல்ல. அரசியல்கட்சிகள், களப்பணியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களை கலந்து ஆலோசிக்க வேண்டும். கொரோனா பேரிடரை எதிர்கொள்ள மாநில அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் முறையான திட்டமிடல் இல்லை என்பது அதன் செயல்பாடுகளிலிருந்து தெரிகிறது. புள்ளி விவரங்களை குறைத்து காட்டி நல்லப்பெயர் எடுப்பதை விட மனித உயிர்களை மதித்து நடக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்தப் போராட்டத்திற்கு கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் தலைமை தாங்கினார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.கே. சண்முகம், எஸ்.கே. மகேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் மண்டல அதிகாரியிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள், பாதிப்புக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பரிசோதனைகள் செய்யப்படும் என உறுதி அளித்தனர்.