tamilnadu

img

மாநில அரசை கையேந்த வைக்கும் மோடி அரசுக்கு கண்டனம்

விழுப்புரம் / கடலூர், டிச.4 - நெஞ்சை உலுக்கும் காட்சிகள். வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள். மண்ணோடு மண்ணாய் அழிந்த விளை நிலங்கள். கதறி அழும் உப்பளத் தொழிலாளர்கள். குடும்பத்தின் பிழைப்பையே பறிகொடுத்த விவசாயிகள்.

பெஞ்சால் புயல் தமிழகத்தின் வடமாவட்டங் களில் ஏற்படுத்தியுள்ள பேரழிவை நேரில் கண்ட  சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, பெ.சண்முகம் கண்கலங்கினர். “எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்து விட்டது” என மரக்காணம் உப்பளத் தொழிலாளர் கள் கதறியபோது, வாசுகி அவர்களை ஆறுதல் படுத்தினார். 2,500 ஏக்கர் பரப்பளவிலான உப்ப ளம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. “குறைந்தது 6 மாதங்களுக்கு வேலையே இருக் காது. எங்கள் குடும்பங்கள் என்ன செய்யும்?” என்ற  தொழிலாளர்களின் கேள்விக்கு, “மாதம் ரூ.5,000 வீதம் ஆறு மாதங்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்துவோம்” என உறுதியளித்தார் பெ.சண்முகம். “நான் 40 ஆண்டுகளாக விவசாயம் செய் கிறேன்.

இப்படி ஒரு பேரழிவை பார்த்ததில்லை” என வானூர் வட்டம் கொஞ்சிமங்கலம் கிராம விவ சாயி கண்ணீருடன் கூறினார். அங்கு பார்த்த காட்சி அதிர்ச்சி தரும் வகையில் இருந்தது. விளைச்ச லுக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கி அழுகியுள்ளன. “ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்காவிட்டால் விவசாயிகள் எப்படி மீள்வது?” என தலைவர்கள் கேள்வி எழுப்பினர். கடலூர் மாவட்டத்தில் நிலைமை மேலும் மோசமாக உள்ளது. சாத்தனூர் அணையி லிருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீர் தென்பெண்ணையாற்றின் கரையோர பகுதிகளை முற்றிலும் அழித்துள்ளது. பண்ருட்டி, நெல்லிக்குப்பம், கடலூர் மாநகரம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. “வெள்ளம் வடிந்தாலும் வாழ்க்கையை எப்படி மீட்பது?” என மக்கள் கதறுகின்றனர்.

“ஒன்றிய அரசின் அலட்சியம் கண்டிக்கத்தக்கது” என செய்தியாளர்களி டம் பேசிய உ.வாசுகி, “ரூ.2,000 கோடி நிவார ணம் கேட்டும் ஒரு ரூபாய் கூட இதுவரை வழங்கவில்லை. மாநில அரசு கையேந்தி நிற்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளனர். இது ஏற்கமுடியாத செயல். அரசியல் பாகுபாடின்றி உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார்.

“விக்கிரவாண்டி அருகே வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த பாக்கியலட்சுமி, தன லட்சுமி குடும்பங்களைப் பார்க்க நெஞ்சமே பதறுகிறது” என்ற தலைவர்கள், “ரூ.5 லட்சம் இழப்பீடு போதாது. குறைந்தது ரூ.10  லட்சமாவது வழங்க வேண்டும். அப்போது தான் அந்தக் குடும்பங்கள் வாழ்க்கையை மீண்டும் தொடங்க முடியும்” என்றனர். அக்குடும்பங்களுக்கு கட்சியின் சார்பில் தலா  ரூ.10 ஆயிரம் நிவாரண உதவி வழங்கினர்.

திண்டிவனம் நகர கிடங்கு-1 பகுதியில் வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட தோழர்கள், “எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாமல் திடீரென வெள்ளம் சூழ்ந்ததால் உடைமைகளை காப்பாற்ற முடியவில்லை. மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் யாரிடமும் தொடர்பு  கொள்ள முடியவில்லை. மூத்த குடிமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்” என மக்களின் துய ரத்தை செய்தியாளர்களிடம் விவரித்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும்  2.50 லட்சம் ஏக்கர் சாகுபடி நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடலூரில் நூற்றுக் கணக்கான ஏக்கரில் நெல், வாழை, கரும்பு பயிர்கள் அழிந்துள்ளன. “விவசாயிகளின் கடன் சுமையும், வங்கிகளின் நெருக்கடியும் அதிகரித்துள்ளது. அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்” என உ.வாசுகி வலியுறுத்தினார்.

“நிரந்தரத் தீர்வுக்கான திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும். தென்பெண்ணை ஆற்றின் கரைகளை பலப்படுத்த வேண்டும். மேட்டூர் அணையி லிருந்து தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் இந்த  அவலம் ஒவ்வொரு ஆண்டும் தொடரும்” என வும் வாசுகி எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டி னார்.

மக்களின் கோரிக்கைகள் நியாயமானவை

“கிராமங்கள் தோறும் சென்று பார்த்த போது பொது மக்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவையாக உள்ளன” என   செய்தியாளர்களிடம் சுட்டிக்காட்டிய உ.வாசுகி, 

- உணவு, குடிநீர் விநியோகத்தை உடனே துவக்க வேண்டும்;

- தேங்கிய வெள்ள நீரை அகற்ற வேண்டும்;

- மருத்துவ முகாம்களை அமைக்க வேண்டும்;

- ரேஷன் கார்டு உள்ள குடும்பங்களுக்கு ரூ.10,000 நிவாரணம் வழங்க வேண்டும்;

- வெள்ளத்தால் அழிந்த அரசு ஆவணங்களை புதுப்பிக்க சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும்;

- பட்டா இல்லாத இடங்களில் வசிப்பவர் களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்என தமிழக அரசுக்கு கோரிக்கைகளை முன்வைத்தார்.

போராட்டம் தொடரும்

“மோசமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க தொடர்ந்து போராடுவோம். ஒன்றிய அரசின் அலட்சி யத்தை தட்டிக் கேட்போம். மக்களுக்கான நியாயமான இழப்பீடுகள் கிடைக்கும் வரை  எங்கள் தலையீடு தொடரும்” என  உ.வாசுகி, பெ.சண்முகம் உறுதியாக அறிவித்தனர்.

ஆய்வுப் பயணத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மாவட்டச் செய லாளர்கள் என்.சுப்பிரமணியன் (விழுப்புரம்), கோ.மாதவன் (கடலூர்), மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு மற்றும் மாவட்ட, வட்ட கட்சித் தலைவர்கள் உடனி ருந்து பாதிப்புகளை ஆவணப்படுத்தினர். தொடர் தலையீடுகளுக்கான திட்டங்களை யும் வகுத்தனர்.

மக்களின் துயரைப் போக்க ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக செயல்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க போதிய நிவாரணமும், நிரந்தரத் தீர்வுக்கான திட்டங்களும் அவசியம் என்பதே கள ஆய்வின் வலியுறுத்தலாக இருந்தது.