சென்னை:
வகுப்புவாத, கொரோனா தொற்றுகளை பரப்பும்பாஜக யாத்திரைக்கு அனுமதி தரக்கூடாது என்று தமிழக அரசுக்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளர்கள் பேராசிரியர் அருணன், க. உதயகுமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநிலசெயற்பாட்டுக் குழுக் கூட்டம் நவம்பர் 2 அன்று மருத்துவர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது.இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகத்தின் பாஜக “வெற்றிவேல் யாத்திரை” என்ற பெயரில் ஒரு பயணத்தை நவம்பர் 6 இல்துவக்கி டிசம்பர் 6இல் முடிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இந்தக் கட்சி வட இந்தியாவில் ராமர் பெயரில் நடத்திய ரத யாத்திரைகள் எப்படி ரத்த யாத்திரைகளாக மாறின என்பதை நாடு அறியும். தனது அரசியல் ஆதாயத்திற்காக மதத்தைப் பயன்படுத்திக் கலவரத்தை தூண்டும் இழிசெயலை இது விடாது நடத்திவருகிறது. வடக்கே ராமர், தமிழகத்தில் முருகர் என்று கிளம்பியிருக்கிறார்கள். தமிழ்க் கடவுளாம் முருகரின் பெயரைச் சொல்லி தமிழ் மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.
பாஜகவில் சேர்ந்த ரவுடிகளால் தமிழகத்திற்கு ஆபத்து
கடவுளின் பெயரால் கலகத்தைத் தூண்டுவது கருத்துரிமை ஆகாது. அது சட்டவிரோதச் செயல்,அரசியல்சாசன மாண்புக்கு எதிரானது. பாஜகவினர் தங்களது யாத்திரையில் சிறுபான்மை மதத்தவருக்கு எதிராக விஷம் கக்குவதை வழமையாகக்கொண்டவர்கள். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போதும் இதைச் செய்திருக்கிறார்கள். இதற்கிடையே இங்கே பிரபலமான ரவுடிகளையும், பல கிரிமினல்களையும் தங்களது கட்சியில் சேர்த்திருக்கிறார்கள். இந்த யாத்திரையில் அவர்கள் தம் கைவரிசையை காட்டக் கூடும்.
பாஜகவின் யாத்திரை முடிவடையும் டிசம்பர் 6 பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள். அந்த நாளைத் தேர்வு செய்திருப்பதிலும்கூட இவர்களின் மதவெறி நிகழ்ச்சிநிரல் இருக்கிறது. அந்த நாளில் இவர்களின் வெறிப்பேச்சு உச்சத்தை தொட்டு, தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது என்று ஆட்சியாளர்கள் பூரிக்கும் அந்த நிலைக்கு பெரும்பங்கம் ஏற்படக்கூடும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அனைத்திற்கும் மேலே இது கொரோனா காலம்.இந்தக் காலத்தில் இத்தகைய யாத்திரை திருத்தணிதுவங்கி திருச்செந்தூர் வரை நடத்தப்படுவது என்பதுநோய் தொற்றை நிச்சயம் அதிகரிக்கும். அதாவது பாஜகவின் யாத்திரை வகுப்புவாத தொற்றையும், கொரோனா தொற்றையும் ஒருங்கே பரப்பும் ஆபத்தைக் கொண்டது. இது சமூகச் சூழலையும், சுற்றுச் சூழலையும் ஒருசேரக் கெடுக்கக் கூடியது. எனவே இந்த யாத்திரைக்கு கண்டிப்பாக அனுமதி தரக்கூடாது என்றும், மாநிலத்தின் மத நல்லிணக்க மரபைப் பராமரிக்க வேண்டும் என்றும் தமிழக அரசை மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
பொய் வழக்கை திரும்பப் பெறுக!
மனுதர்ம சாஸ்திரத்தில் பெண்கள் பற்றிச் சொல்லப் பட்டிருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்கள் ஒருகருத்தரங்கில் எடுத்துக்காட்டியிருந்தார். அதை அவரே சொன்னதாகத் திரித்து, அவரை கண்டித்ததுபாஜக. இந்தப் பித்தலாட்டத்தை அப்படியே ஏற்று அவர்மீது வழக்கு போட்டுள்ளது தமிழக அரசு. இது கருத்துரிமை, பேச்சுரிமை மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலாக மக்கள் ஒற்றுமை மேடை கருதுகிறது.திருமாவளவன் அவர்கள் மீது போடப்பட்டுள்ளபொய் வழக்கை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
ஸ்டான் சாமியை விடுதலை செய்க!
தமிழகத்தைச் சேர்ந்த அருட்தந்தை ஸ்டான் லூர்துசாமி அவர்கள் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தங்கி அம்மாநிலம் உள்ளிட்ட வட மாநிலங்களில்உள்ள பழங்குடியினருக்காகவும், பட்டியல் சாதியினருக்காகவும் சேவை செய்து வருபவர். இந்த மக்களை வெளியேற்றி அப்பகுதி கனிம வளங்களைச் சூறையாடத் துடிக்கும் பெரும் கார்பரேட் றுவனங்களுக்கு எதிராகப் போராடுபவர். இதன் காரணமாகவே இவரைப் பழிவாங்க அந்த நிறுவனங்களும் மோடி அரசும் துடித்துக் கொண்டிருந்தன.இந்த நிலையில் பீமாகோரேகான் வழக்கில் தொடர்பு இருப்பதாகச் சொல்லி இவரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. 84 வயது முதியவரை, நோய் பாதிப்புக்கு ஆளானவரை இப்படி காராக்கிரகத்தில் தள்ளியிருக்கிறார்கள் என்றால் பாஜக ஆட்சியாளர்கள் எத்தகைய இரக்கமற்றவர்கள் என்பது தெளிவாகிறது. ஒரு மனித உரிமைப் போராளியை இப்படிமுடக்கிப் போடுவதை மக்கள் ஒற்றுமை மேடை வன்மையாகக் கண்டிப்பதோடு அவரை உடனடியாக விடுதலைசெய்ய வேண்டும் . அவர் மீது போடப்பட்டுள்ள பொய்வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
சிறுபான்மையோர் உரிமை நாள்
டிசம்பர் 18 சிறுபான்மையோர் உரிமை நாளாகும்.சிறுபான்மையோர் உரிமைகள் பாதுகாக்கப்படுவது மத நல்லிணக்கப் பேணலுக்கு அடிப்படைத் தேவையாகும். சொல்லப்போனால் சிறுபான்மையோர் உரிமைகள் எந்தளவுக்கு மதிக்கப்படுகிறதோ அந்தஅளவுக்கே அது நாகரிக சமூகமாகும். தமிழ்ச் சமூகம் சிறந்த சமூக நல்லிணக்க மரபைக் கொண்டதாகும். அதைத் தொடர்ந்து பராமரிக்கும் வகையில் இந்தநாளைப் பொருத்தமான முறையில் கடைப்பிடிப் பது என்று மக்கள் ஒற்றுமை மேடை முடிவு செய்கிறது.குறிப்பாக, பல்லாண்டுகளாகத் தமிழகச் சிறைகளில் வாடும் முஸ்லிம் கைதிகளின் விடுதலையை வற்புறுத்த இந்த தினத்தை பயன்படுத்துவது என்றும் சிறைக் கைதிகளின் விடுதலையிலும் மதப் பாகுபாடுகாண்பிக்கப்படும் அநீதிக்கு முடிவு கட்ட வேண்டும் என்று உறுதி பூண்டுள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.