tamilnadu

img

கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளரை அறிவித்தது தி.மு.க

கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக தி.மு.க சார்பில் ரங்கநாயகி என்பவர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

 இங்கு ஏற்கெனவே மேயராக இருந்த கல்பனா ராஜினாமா செய்ததை அடுத்து புதிய வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இந்த மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நாளை நடைபெறுகிறது.

கோவை மாநகராட்சி மேயராக கல்பனா ஆனந்தகுமார் பதவி வகித்து வந்தார். இவர் உடல்நலம் மற்றும் சொந்த காரணங்களுக்கு மேயர் பதவியை ராஜினாமா செய்தார். இவர் பொறுப்பேற்றது முதலே பல புகார்கள் வந்தன. மேயருக்கும் உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவியது. தி.மு.க உறுப்பினர்களும் அவ்வப்போது கல்பனாவுக்கு எதிர்ப்பை காட்டினர். மேலும் நிர்வாகத்தில் கணவரின் தலையீடு இருந்ததாகவும் புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் கல்பனாவின் ராஜினாமாவை அடுத்து கோவை மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த தமிழக மாநில தேர்தல் ஆணையம் கடந்த ஜூலை 25 ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி கோவை மேயர் பதவிக்கு வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி, அதாவது நாளைக்கு மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. கோவை மேயர் பதவிக்கு பெண் கவுன்சிலர்கள் இடையே போட்டாபோட்டி நிலவியதாகச் சொல்லப்பட்டது. 27 வது நகராட்சி உறுப்பினர் அம்பிகா, 29 ஆவது நகராட்சி உறுப்பினர் ரங்கநாயகி, 34 ஆவது நகராட்சி உறுப்பினர் மாலதி, 36 ஆவது நகராட்சி உறுப்பினர் தெய்வானை, 46 ஆவது நகராட்சி உறுப்பினர் மீனா லோகு, 63 ஆவது நகராட்சி உறுப்பினர் சாந்தி ஆகியோரிடையே போட்டி இருந்தது. 

இந்த நிலையில் கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா அறையில் நாளை காலை 10.30 மணிக்கு மேயர் பதவிக்கு வார்டு உறுப்பினர்களில் இருந்து ஒருவரை தேர்வு செய்யும் மறைமுக தேர்தல் கூட்டம் நடைபெறுகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் கோவை மாநகராட்சியின் மேயராக யாரை அறிவிப்பது என்பது குறித்து இன்று அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் ரங்கநாயகி என்பவரை வேட்பாளராக அறிவித்தார் கே.என்.நேரு. ரங்கநாயகி கோவை மாநகராட்சியின் 29 ஆவது நகராட்சி உறுப்பினர் உள்ளார். இவர் கோவை மேயர் தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். நாளை மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.