tamilnadu

img

தொழிலாளர் வர்க்க விரோத, மக்கள் விரோத நாசகர பட்ஜெட்டிற்கு சிஐடியு கடும் கண்டனம்

தொழிலாளர் வர்க்க விரோத, மக்கள் விரோத நாசகர பட்ஜெட்டிற்கு சிஐடியு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சிஐடியு பொதுச் செயலாளர் தபன் சென் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 1 அன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2022-23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், சத்தம் அதிகமாக இருந்தபோதிலும் சாராம்சம் என்பது அநேகமாக எதுவுமே கிடையாது. ஜனவரி 31 அன்று சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையின் தொடர்ச்சியாக இந்த பட்ஜெட்டும், எந்த அளவிற்கு மக்கள் நலன் மீது கிஞ்சிற்றும் கவலைப்படாது, கூருணர்ச்சியற்றமுறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் என்பது நன்கு பிரதிபலிக்கிறது. மக்களின் வாழ்வாதாரங்கள் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சியடைந்திருக்கின்றன, அவர்களின் வருமானங்கள் வீழ்ச்சியடைந்திருக்கின்றன, நாளும் உயரும் விலைவாசியால் அவர்களின் பசி-பட்டினிக் கொடுமைகள் உக்கிரமடைந்திருக்கின்றன. ஆட்சியாளர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய சில கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக்கொடுக்கும் கொள்கையைக் கடைப்பிடிப்பதன்மூலம், நாட்டின் பெரும்பான்மை மக்கள் சொல்லொணாக்கொடுமைகளுக்கு ஆளாவது தொடர்கிறது. இத்தகைய ஏற்றத்தாழ்வினை நாகரிகமுள்ள சமுதாயம் எதுவும் சகித்துக்கொள்ள முடியாது. நிதியமைச்சர் உதிர்த்துள்ள “இயல்பூக்கத்துடனான வளர்ச்சி” (inclusive growth), “நிதி சேர்த்தல்”( (financial inclusion), போன்ற சொற்றொடர்கள், பாஜக அரசாங்கத்தின்  வெட்கமற்ற கபடநாடகத்தைத்தான் காட்டுகிறதேயொழிய வேறொன்றுமில்லை. 

நாட்டின் சொத்துக்களான உள்கட்டமைப்பு வசதிகள், உற்பத்தித் தொழில்கள், சுரங்கத் தொழில்கள் போன்ற நாட்டின் சொத்துக்கள் அனைத்தையும் அந்நிய மற்றும் இந்திய கார்ப்பரேட்டுகளிடம் தாரை வார்ப்பதைக் குறியாக வைத்தே இந்த பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. நிதியமைச்சர் நாட்டின் “ஏர் இந்தியா” விமான நிறுவனத்தையும், நிலச்சல் இஸ்பாட் (Nilachal Ispat) நிறுவனத்தையும் டாட்டா நிறுவனத்திடம் தாரை வார்த்திருப்பதற்கு தனக்குத்தானே பாராட்டுக்களைக் கூறிக்கொண்டுதான் பட்ஜெட் உரையையே துவக்கியிருக்கிறார்.  இதே போன்று நாட்டின் இதர பொதுத்துறை நிறுவனங்களும் அந்நிய மற்றும் இந்திய கார்ப்பரேட்டுகளுக்குப் படிப்படியாகத் தாரை வார்க்கப்படும் என்றும் புளகாங்கிதம் அடைந்து கூறியிருக்கிறார். உண்மையில் மோடியின் ஆட்சியில் பொருளாதாரக் கொள்கை நாடாளுமன்றத்தின் நடைமுறையின் ஆதிக்க வரம்புக்குள் வராமல், கொஞ்சம் கொஞ்சமாக அப்புறப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பட்ஜெட்டும் அந்தப் பாதையில்தான் எதேச்சாதிகார, மக்கள் விரோத நாசகரக் கொள்கைகள் சென்றுகொண்டிருக்கின்றன என்பதை நன்கு மெய்ப்பிக்கிறது. இந்த பட்ஜெட் நாட்டின் நலன்களுக்கு மேலும் மோசமான அளவில் கேடு விளைவித்திடும்.

இந்தப் பின்னணியில்தான் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது. வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு உதவிடும் வகையில் மூலதனச் செலவினங்களை அதிகரித்திருப்பதாக பட்ஜெட்டில் தம்பட்டம் அடிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு பெட்ஜெட்டில் மூலதனச் செலவினத்திற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை 1.06 லட்சம் கோடி ரூபாய்களாகும். உண்மையில் சென்ற ஆண்டு செலவினத்துடன் ஒப்பிடும்போது பெயரளவிலான கூடுதல் தொகையே ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதுவும் அதிகரித்துள்ள பணவீக்கத்தின் தாக்கத்தால் சரிசெய்யப்பட்டுவிடும். உண்மையில் 2022-23ஆம் ஆண்டுக்கான மூலதனச் செலவினம் என்பது சென்ற ஆண்டு வந்த மூலதன வரவான 63 ஆயிரம் கோடி ரூபாயைவிட மிகவும் குறைவாகும். இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் மூலதனச் செலவினங்கள்கூட அரசாங்கத்தின் பொது நிதியை வற்றச்செய்திடக்கூடிய தேசிய பணமாக்கல் திட்டத்தின் (National Monetisation Pipeline) மூலம் தனியார் கார்ப்பரேட்டுகளுக்கு அளிக்கப்படுவதற்கானவையேயாகும்.

பொருளாதாரத்தில் நுகர்வோர் செலவினம் கடுமையாக வீழ்ந்துள்ள பின்னணியில், வேலை வாய்ப்பை உருவாக்கும் விதத்தில் மூலதனச் செலவினங்களை உருவாக்கியிருக்க வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம். ஆனால் இந்த அரசு தன் கார்ப்பரேட் நலனுக்குச் சேவகம் செய்யும் விதத்திலேயே மூலதனச் செலவினங்களையும் அறிவித்திருக்கிறது.  அடுத்த ஐந்தாண்டுகளில் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் கூடுதலாக உருவாக்கப்படும் என்று கூறியிருப்பதெல்லாம் ஏமாற்று வேலையே தவிர வேறல்ல.  

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்புக்கு உள்ளான தொழிலாளர் வர்க்கம் குறித்து கிஞ்சிற்றும் கவலைப்படவில்லை. மாறாக அதே சமயத்தில் உழைக்கும் மக்களை மேலும் கசக்கிப்பிழியும் விதத்திலேயே அவர்கள் மீது மறைமுக வருமான வரிகளை மேலும் அதிகரித்திருக்கின்றன. இத்துடன் எரிபொருள்களின் விலைகள் உட்பட    அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளையும் நாளும் உயர்த்திக் கொண்டே இருக்கிறது. உணவு தான்யங்களுக்கு அளித்துவந்த மான்யங்களையும் கடுமையாக வெட்டிக் குறைத்திருக்கிறது.  

அதே சமயத்தில் கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறது. வரி நிர்வாகத்தை எளிமைப்படுத்துகிறோம் என்ற பெயரில் அவர்களுக்கு ஏராளமான சலுகைகளை அளித்திருக்கிறது.  2020-21இல் கார்ப்பரேட்டுகளுக்கு வரிச் சலுகைகளாக அளிக்கப்பட்ட தொகை 72 ஆயிரத்து 041 கோடி ரூபாயாகும். இது அவர்கள் அரசுக்கு அளிக்காமல் ஏமாற்றிய 4.05 லட்சம் கோடி ரூபாயையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு கார்ப்பரேட்டுகள் நாட்டின் மீதும் நாட்டு மக்கள் மீதும் புரிந்துவரும் கிரிமினல் குற்றங்களைத் தடுப்பதற்குப் பதிலாக அரசாங்கம் அவர்களை மேலும் இதுபோல் குற்றங்கள் புரியத் தூண்டிவிட்டிருக்கிறது.

இந்த பட்ஜெட் முழுக்க முழுக்க மக்கள் விரோத பட்ஜெட்டாகும். நாட்டின் பொருளாதாரத்தைப் பொறுத்தவரை முற்றிலும் நாசப்படுத்தக்கூடிய பட்ஜெட்டாகும். இத்தகைய நாசகரக் கொள்கையை அமல்படுத்திக்கொண்டிருக்கும் ஆட்சியை எதிர்த்திட தொழிலாளர் வர்க்கம் ஒன்றுபட்ட போராட்டத்திற்கு அணிதிரண்டிட வேண்டும்.

இத்தகைய நாசகர மக்கள் கொள்கைக்கு எதிராக வரும் 2022 மார்ச் 28-29 தேதிகளில் நடைபெறும் அகில இந்திய பொது வேலைநிறுத்தத்தை நோக்கி முன்னேறுவோம்.

இவ்வாறு தபன்சென் அறிக்கையில் கூறியுள்ளார்.  

(ந.நி.)