தமிழகத்தில் கோவிஷீல்டு தடுப்பூசியை பரிசோதிக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர உலகம் முழுவதும் ஆய்வாளர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ரஷ்யா கொரேனா தடுப்பூசியை பதிவு செய்துள்ளது. இந்நிலையில் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனாவை கட்டுப்படுத்த கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசியை தமிழகத்தில் பரிசோதனை செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-
இந்த தடுப்பூசி முதல் கட்டமாக, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தலா 300 பேரிடம் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கோவிஷீல்டு தடுப்பூசி 3 ஆம் கட்ட ஆராய்ச்சி நடத்தப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு வரும் .
மேலும் இந்த தடுப்பூசி வெள்ளை அணுக்களை 14 நாட்களில் மனித உடலில் உருவாக்கும். இந்த வெள்ளை அணுக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட செல்களை அழிக்கும். அதன் பின்னர் 28 நாட்களுக்குள் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்கும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.