சென்னை, டிச. 20 - ‘மிக்ஜம்’ புயல் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் தென் மாவட்டங்களில் அதிக கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவித்து, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள விரைந்து நிதி ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ெவ்வாயன்று (டிச.19) இரவு புதுதில்லியில் சந்தித்தார். அப்போது, இந்தக் கோரிக்கையை விடுத்த அவர், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தற்காலிக நிவாரணத் தொகையாக ரூ. 7033 கோடியும், நிரந்தர நிவாரணத் தொகையாக ரூ. 12,659 கோடியும் விரைந்து வழங்குமாறு பிரதமரிடம் கேட்டுக்கொண்டார்.
மேலும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களின் தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காகவும், வாழ்வாதார உதவிக்காகவும், பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ. 2000 கோடியை அவசர நிவாரண நிதியாக வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கோரிக்கை விடுத்துள்ளார். இச்சந்திப்பின்போது, மக்களவை திமுக தலைவர் டி.ஆர். பாலு உடனிருந்தார்.