சென்னை, டிச. 24 - இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக மீட்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 17 மீனவர்கள் IND-TN-10-MM-206 மற்றும் IND-TN-10-MM-543 ஆகிய பதிவெண்கள் கொண்ட இரண்டு இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடிப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், இலங்கைக் கடற்படையினரால் 24.12.2024 அன்று சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அக்கடிதத்தில், 20.12.2024 அன்று இலங்கையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத ஆறு நபர்களால், நாகப்பட்டினம் மாவட்டம், கோடியக்கரை கிராமத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட இருவேறு சம்பவங்களையும் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றுள்ள முதலமைச்சர், இந்த மூர்க்கத்தனமான தாக்குதலில், இரண்டு நாட்டுப் படகுகளில் பயணித்த ஆறு மீனவர்களில், மூன்று மீனவர்கள் காயமடைந்துள்ளனர் என்றும், இந்தத் தாக்குதலின்போது, மீனவர்களது மீன்பிடிப் படகுகளில் இருந்த ஜிபிஎஸ் (GPS) கருவிகள், விஎச்எப் (VHF) கருவிகள், மீன்பிடி வலை, கையடக்கத் தொலைபேசி மற்றும் அவர்கள் பிடித்த மீன்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டில் மட்டும் 530 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 71 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், அண்மைக்காலமாக நடைபெற்று வரும் இத்தகைய கைது, தாக்குதல் சம்பவங்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பி வாழும் மீனவ மக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளதாகக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.
எனவே, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், எதிர்காலத்தில் தமிழக மீனவர்கள் மீது இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்கவும் உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.