மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக புதிய டிரான்ஸ்பார்ம் அமைக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை நடைபெறவுள்ளது. போட்டி நடைபெறும் பூஞ்சேரி "போர் பாய்ண்ட்ஸ்" அரங்கம் 70 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்டது. ஆனால் கூடுதலாக 50 ஆயிரம் சதுர அடி தேவை என்று இந்திய செஸ் கூட்டமைப்பினர் தமிழக அரசிடம் கேட்டனர்.
இதையடுத்து போட்டி நடைபெறும் அரங்கின் வடபகுதியில் இருந்த திறந்தவெளி கார் நிறுத்தம் பகுதியை, அரங்கமாக மாற்றிக் கொடுக்க அரசு ஒப்புக்கொண்டது. பின்னர் பிரமாண்டமான தற்காலிக விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வந்தது.
இந்த நிலையில் புதிய அரங்கத்திற்கு தேவையான மின்சார வசதிகள் தங்களிடம் இல்லை என அரங்கத்தின் நிர்வாகம் கூறியதால், தமிழக மின் வாரியம் ஆலத்தூர், பூஞ்சேரி துணை மின் நிலையங்களின் உயர் அழுத்த மின் தடத்தில் அரங்கம் அருகே புதிய டிரான்ஸ்பார்ம் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது.
24 மணி நேரமும் மின் தடங்கல் வராத வகையில், மின் தட வயர்களில் புதிய பாலிமர் இன்சுலேட்டர்களும் பொருத்தப்பட்டது. இதை தினசரி கவனிக்க 10 க்கும் மேற்பட்ட சிறப்பு மின் பொறியாளர்களை மின்சார வாரியம் நியமித்துள்ளது.