tamilnadu

img

சென்னையில் வாக்கு பதிவு எந்திரங்களுக்கு 4 அடுக்கு பாதுகாப்பு

சென்னை, ஏப். 20- சென்னையில் வாக்குபதிவு எந்திரங்கள் 4 அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தென்சென்னை தொகுதியில் பதிவான வாக்குகள் அண்ணா பல்கலைக் கழகத்திலும், மத்திய சென்னையில் பதிவான வாக்குகள் லயோலா கல்லூரியிலும், வடசென்னையில் பதிவான வாக்குகள் ராணி மேரி கல்லூரியிலும் எண்ணப்பட உள்ளது. இதற்காக பதிவான வாக்கு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அரசியல் கட்சி பிரமுகர்கள், தேர்தல் பார்வையாளர்கள், அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

லயோலா கல்லூரியில் நடை பெற்ற பணிகளை ஆய்வு செய்த ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்க ளிடம் கூறியதாவது:

வாக்கு எண்ணும் மையங்களில் 188 கேமராக்கள் பொருத்தப்பட்டு, 4 அடுக்கு காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அறைகளில் வாக்குப்பெட்டிகள் வைத்து, தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்படும். அறைகள் சீல் வைத்த பிறகு அந்த இடம் மத்திய காவல்படை வசம் சென்றுவிடும் இதுதான் முதல் அடுக்கு பாதுகாப்பு. அங்கு யாரும் அனுமதியில்லை.

சீல் வைக்கப்பட்ட அறைக்கு இரண்டு பூட்டு போடப்படும். அதன்பின் அங்குள்ள மின்விளக்கு அணைக்கப்பட்டு, பியூஸ் கேரியர் பிடுங்கப்படும். தீ விபத்து தடுப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்திற்கு தமிழ்நாடு சிறப்பு படை பாதுகாப்பு அளிக்கும். இது இரண்டாம் அடுக்கு பாதுகாப்பு. மூன்றாவது அடுக்கில் ஆயுதப்படை காவலர்கள் பணியில் இருப்பார்கள். 4வது அடுக்காக அந்தப்பகுதியை சார்ந்த காவல்துறையினர் பாதுகாப்பு அளிப்பார்கள்.

இந்தப் பணியில் 1095 பேர் 3 ஷிப்டுகளாக 24 மணி நேரமும் பணி யாற்றுவார்கள். மாவட்ட தேர்தல் அலுவலர்கள் 24 பேர் மூன்று ஷிப்டு களாக பணியாற்றுவார்கள். தேர்தல் ஆணையம் ஒப்புதல் இல்லாமல் இந்த அறைகளை திறக்க முடியாது. அரசியல் கட்சி பிரமுகர்கள் பக்கத்து அறையில் தங்கி 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்பார்கள். தனிநபர்களோ, அரசு அதிகாரிகளோ அனுமதியில்லாமல் செல்ல முடியாது. லயோலா கல்லூரி யில் செய்யப்பட்டுள்ள இதேபோன்ற ஏற்பாடுகள் ராணி மேரி கல்லூரியிலும், அண்ணா பல்கலைக் கழகத்திலும் செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குஎந்திரங்கள் தனித்தனி அறைகளில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பயன்படுத்தாத வாக்குபெட்டிகள் சிந்தாதரிப் பேட்டையில் உள்ள கிடங்கில், துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரின் பாதுகாப்போடு வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

வாக்காளர் விடுபடுதல்
செய்தியாளர்களின் கேள்வி களுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:

2019 தேர்தலுக்கு பிறகு 5 முறை, 2021 தேர்தலுக்கு பிறகு 7 முறை வாக்காளர், சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் போன்றவை செய்வதற்கான முகாம் நடந்துள்ளது. கடந்தாண்டு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு சேர்த்தல், நீக்கல் செய்யப்பட வில்லை. உண்மையாக சிலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளது. அதிகாரிகள் ஆய்வு செய்யும்போது வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றியே சேர்த்தல் நீக்கல் நிகழ்ந்துள்ளது. ஆனால் குறிப்பிட்டு நபர்களை குறிவைத்து செய்ய வில்லை. தேர்தல் ஆணையம் வழங்கும் வாய்ப்புகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

வாக்காளர் அடையாள அட்டை இருந்தாலே வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கும் என்பது தவறு. உதாரணமாக, தொகுதி விட்டு வேறு தொகுதிக்கோ அல்லது வீடு மாறும்போது ஆய்வு செய்யும் அதிகாரி பெயரை நீக்கிவிடுவார். கடந்தாண்டு செப்டம்பர் இந்த ஆண்டு ஜனவரி என இரண்டு முறை யும் ஆய்வு செய்து வாக்களர் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. அதிகாரிகள் தன்னிச்சையாக வாக்காளர்களை நீக்கவில்லை. நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், படிப்படியாக தளர்வு செய்யப்படும்.

வியாசர்பாடி பகுதியில் ஒரே சின்னத்தில் வாக்கு பதிவு ஆவ தாக கூறிய குற்றச்சாட்டு தவ றானது. மத்திய சென்னையில் ஒரு எந்திரத்திரத்தில் பேட்டரி சார்ஜ் குறைந்தது. அது உடனடி யாக சரிசெய்யப்பட்டது. மேலும் வேட்பாளர் ஒருபுகார் தெரி வித்தார். அவருக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. தென்சென்னை தொகுதி மயிலாப்பூரில் ஒரு பூத்தில் புகார் எழுந்துள்ளது. வாக்குச்சாவடி அலுவலர் குறிப்பை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.