சென்னை, ஜூன் 25- சென்னை மாநகரில் செயின் பறிப்பு சம்பவங்கள் மீண்டும் தலை தூக்கியுள்ளன. திங்களன்று மட்டும் 11 இடங்களில் பெண்களிடம் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோட்டூர்புரத்தில் பெண்ணிடம் செயின் பறித்த 2 கொள்ளையன்களில் ஒருவனை காவல்துறையினர் பிடித்துள்ளனர். விசாரணையில் சென்னை மூலக்கடை சத்தியவாணி முத்துநகரைச் சேர்ந்த ராகேஷ் (21) என தெரிய வந்துள்ளது. மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற மற்றொரு கொள்ளையன் ஹெல்மெட் அணிந்திருந்தான். பின்னால் அமர்ந்திருந்த ராகேஷ் ஹெல்மெட் அணியாத நிலையில் சிசிடிவியல் இவரின் முகம் பதிவானதைக் கொண்டு காவல்துறையினர் துப்பு துலக்கினர். மயிலாப்பூர் துணை ஆய்வாளர் மயில்வாகணன் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் சுதர்சன் தலைமையி லான தனிப்படையினர் செயின் பறிப்பு நடைபெற்ற 36 மணி நேரத்தில் கொள்ளையனை ஒருவரை கைது செய்துள்ளனர். கைதான ராகேஷ் மீது கொலை வழக்கு உள்பட 9 வழக்கு கள் உள்ளன. மேலும் ஒரே நாளில் 5 இடங்களில் ராகேஷ் கைவரிசையைக் காட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற வாலிபர் தலைமறைவாகிவிட்டார். அவரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். இந்நிலையில், சென்னையில் செயின் பறிப்பை கட்டுப்படுத்த காவல்துறை ஆய்வாளர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.