சென்னை, நவ. 25 - ஐஏஎஸ், ஐபிஎஸ், போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளை 22 மாநில மொழிகளிலும் நடத்த உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) சார்பில் ஆண்டுதோறும் குடிமைப் பணி தேர்வுகள் (CIVIL SERVICES EXAM) நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும். இதில் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்களை வைத்து இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.
கடைசியாக, கடந்த மே மாதம் ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் 73 நகரங்களில் நடைபெற்றது. 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வை எழுத விண்ணப்பித்திருந்தனர். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் வரை பதிவு செய்து தேர்வில் கலந்துகொண்டனர்.
இந்த சிவில் சர்வீசஸ் தேர்வுகளின் வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே வழங்கப்படும். பொதுவாக இதுபோன்ற தேர்வுகளில் வெற்றியடைய தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட கேள்விகளுக்கு விடையளிப்பது போன்ற கால நிர்ணயம் மிக அவசியம். குறிப்பிட்ட நேரத்துக்குள் அணுகுவதற்கு ஆங்கிலம் அல்லது இந்தி சரளமாக அறிந்திருப்பது அவசியமாகி றது. இது இந்தி தெரியாத பிராந்திய மொழி மாணவர்க ளுக்கும் இந்தி தெரிந்த மாண வர்களுக்கும் பாகுபாட்டை ஏற்படுத்தும் முறையாக உள்ளது என்று கூறுவது தொடர் குற்றச்சாட்டாக உள்ளது.
இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், குடிமைப் பணித் தேர்வுகள், இந்தி மொழி தெரிந்தவர்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் மாநில மொழிகளில் புலமை பெற்றவர்களுக்கு பாரபட்சமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், சிவில் சர்வீசஸ் தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்துவதால் வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு மறுக்கப்படுவதால், அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளிலும் குடிமைப் பணித் தேர்வுகளை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு மீதான விசாரணையை தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு, டிசம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.