சென்னை,டிச.11- மகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை நினைவுகூர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “உய்வகை காட்டும் உயர்தமிழுக்குப் புதுநெறி காட்டிய புலவன்! தமிழ்க்கவியில், உரைநடையில், தனிப்புதுமை படைத்த செந்தமிழ்த் தேனீ மகாகவி பாரதியாரின் பிறந்தநாளில் அவரை வணங்குகிறேன்!
மொழி - நாடு - பெண் விடுதலை - பிற்போக்குத்தனங்கள் எதிர்ப்பு எனத் தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்கும் தொண்டு செய்த பாரதி வாழிய!” என்று பதிவிட்டுள்ளார். மகாகவி பாரதியாரின் பிறந்தநாளையொட்டி தமிழக அரசு சார்பில் சென்னை மெரீனா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள பாரதியாரின் திருவுருவச் சிலைக்கு அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.