tamilnadu

img

பொன்னேரி அருகே வரதட்சணை கொடுமைக்கு மணப்பெண் தற்கொலை!

பொன்னேரி அருகே வரதட்சணை  கொடுமைக்கு மணப்பெண் தற்கொலை!

திருவள்ளூர், ஜூலை 1- பொன்னேரி அருகே திருமணமான 4வது நாளில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக  கணவர் குடும்பத்தினரிடம் காவல்துறை விசாரணை நடத்தினர். திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த முஸ்லிம் நகரை சேர்ந்த கஜேந்திரன் - சௌந்தரி தம்பதியின்  மூத்த மகள் லோகேஸ்வரி (24). பி.ஏ எகனாமிக்ஸ் முடித்த பட்டதாரி பெண்ணான இவருக்கும் காட்டாவூர் கிராமத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பன்னீர் (37) என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது.  இந்நிலையில்  இளம்பெண் லோகேஸ்வரியை அவரது கணவர் குடும்பத்தினர் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. 10 சவரன் வரதட்சனை கேட்டு, 5 சவரன் கொடுப்பதாக ஒப்புக்கொண்ட நிலையில் 4 சவரன் நகை வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது. சீர்வரிசை பொருட்களும், பைக் ஒன்றும் திருமணத்தின் போது சீதனமாக கொடுக்கப்பட்டுள்ளது.  தாய் வீட்டிற்கு வந்திருந்த லோகேஸ்வரி தமது பெற்றோரிடம் இதுகுறித்து புகார் தெரிவித்து வேதனையை பதிவு செய்துள்ளார்.  இந்நிலையில் திங்களன்று (ஜூன் 30), இரவு வீட்டின் கழிவறையில் லோகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கழிவறைக்கு சென்று நீண்ட நேரம் லோகேஸ்வரி வராததை கண்ட அவரது குடும்பத்தினர் கழிவறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது கழிவறையிலிருந்து தூக்கிட்ட நிலையில் இருந்து அவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து பிரேத  பரிசோதனைக்காக சவக்கிடங்கில் வைத்து பொன்னேரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் குடும்பத்தினர் கொடுமை செய்ததாக தனது அக்கா தம்மிடம் மனதுயரத்தை வெளிப்படுத்தியதாகவும் நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது தங்கை தெரிவித்தார். கணவர் குடும்பத்தினர் மீது காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைக்கின்றனர். இளம் பெண்ணின் கணவர் பன்னீர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் பொன்னேரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இளம்பெண்ணின் தற்கொலைக்கு வரதட்சணை கொடுமை மட்டுமே காரணமா, அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனவும் காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி நான்கே நாளில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பொன்னேரி கோட்டாட்சியர் விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 1 சவரன் நகையை வரதட்சணையாக கேட்டு கொடுமைப்படுத்தியதால் திருமணமான 4வது நாளிலேயே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவத்தையொட்டி ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.