tamilnadu

img

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பன்னீர் செல்வம் மீது பாட்டில் வீச்சு

அதிமுகவிற்கு ஒற்றைத் தலைமையா இரட்டை தலைமையா என்ற விவாதம் கடந்த சில நாட்களாக சூடு பிடித்திருந்தது. 
அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று (வியாழக்கிழமை) நடந்தது. கடந்த சில நாட்களாக மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் இன்று ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் பொதுக்குழுவுக்கு வந்து சேர்ந்தார்கள். 
இருவரும் வேறு பாதையில் வந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி வேண்டுமென்றே தாமதமாக வந்ததாக ஓபிஎஸ் தரப்பு குற்றம்சாட்டியது. ஓபிஎஸ் பொதுக்குழு கூட்டத்திற்கு வந்தவுடன் ஓபிஎஸ்ஸை வெளியேறச் சொல்லி இபிஎஸ் ஆதரவாளர்கள் கோஷமிட்டனர். 
அதுபோல மேடையில் ஓபிஎஸ் - இபிஎஸ் இருவருக்கும் இடையில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் இருந்தார். 
இந்நிலையில் அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் திடீரென அறிவித்தார். அதன் பின்னர் நிரந்தர அவைத்தலைவராக தமிழ்மகன் உசேனை தேர்வு செய்வதாக அறிவித்தனர். மீண்டும் எழுந்த சிவி சண்முகம் ஒற்றை தலைமையை தேர்வு செய்ய உடனடியாக பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்கள் கருதுவதாக அவைத்தலைவரிடம் ஒரு கோப்பை வழங்கினார். பின்னர், பேசிய அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூலை 11-ம் தேதி மீண்டும் நடைபெறும் என அறிவித்தார். இதையடுத்து, அதிமுக பொதுக்குழு கூட்ட மேடையிலிருந்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சட்டத்திற்கு புறம்பாக பொதுக்குழுவை நடத்துவதாக கூறி வெளியேறினர். அப்போது ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ்க்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும் ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஓபிஎஸ்வுடன் ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரும் வெளியேறினார்கள். ஓ.பன்னீர்செல்வம் மண்டபத்தை விட்டு வெளியே வந்த போது வேனில் ஏறி வீடு திரும்புவதற்காக சென்றார். ஆனால் அவரது வேன் டயர் பஞ்சர் ஆகி இருந்தது. எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் தான் வேனை பஞ்சர் செய்து காற்றை வெளியேற்றி விட்டதாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் வேறு வாகனத்தில் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.