சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு ஒவ்வோர் ஆண்டும் சிறந்த பெண் இலக்கிய வாதிக்கு அவ்வையார் பெயரில் விருது வழங்கி வருகிறது.
அதன்படி 2024-ஆம் ஆண்டிற்கான ‘அவ்வையார் விருது’ இலக்கியத்தின் மூலமாக தலித் மக்களின் குரலாக ஒலித்து, சமூகத் தொண்டாற்றி வரும் முன்னணி எழுத்தாளரும், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவருமான பாஸ்டினா சூசைராஜ் என்கிற பாமாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களின் வாழ்க்கையை, குறிப்பாக ஒடுக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையை தனது வாழ்வனுபவங்களின் மூலம் அதன் தகிக்கும் அனலோடு தமிழிலக்கிய படைப்பு களாகவும், சாதி மற்றும் பாலினம் சார்ந்து சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையையும் அநீதிகளையும் எடுத்துக்காட்டும் தொகுப்புகளாகவும் படைத்து வருபவர் எழுத்தாளர் பாமா.
இவரது நூல்களான கருக்கு, சங்கதி, வன்மம், மனுசி போன்ற நாவல்களும், கிசும்புக்காரன், கொண்டாட்டம், ஒரு தாத்தாவும் எருமையும் போன்ற சிறுகதை தொகுப்புகளும் குறிப்பிடத்தக்கவை. இவர் எழுதிய “கருக்கு” என்ற புதினம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, 2000-ஆம் ஆண்டின் ‘கிராஸ் வேர்ட்புக்’ விருதை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.