சென்னை, ஜூன் 7- தென் இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் அரசு மருத்துவமனை ஒன்றில் செயற்கை கருத்தரித்தல் மையம் தொடங்கப் பட்டுள்ளது.
எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் 6.97 கோடி ரூபாய் மதிபீட்டில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் அதிநவீன செயற்கை கருத்தரிப்பு மையம் மற்றும் பிரசவ வளாகத்தை வெள்ளியன்று (ஜூன் 7) மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், செயற்கை கருத்தரித்தல் மையம் என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென் இந்தியாவிலேயே முதல் முறையாக அரசு மருத்துவமனை யில் தொடங்கப்பட்டுள்ளது. தில்லி, சண்டிகர், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு மையம் இருந்தா லும் அவர்கள் தனியார் மருத்துவ மனையில் பணம் வசூலிப்பது போல் இரண்டரை லட்சம் ரூபாய் வரை பெறுகிறார்கள்.
ஆனால் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ள செயற்கை கருத்தரிப்பு மையம், முழுவதும் இலவசமாக செயல்படுத்தப்பட உள்ளது. மாநிலத்தில் ஒரு சில கருத்தரிப்பு மையங்கள் மனித நேயமற்ற செயலில் ஈடுபடுகின்ற னர். ஈரோடு, சேலம் போன்ற 5 இடங்களில் இருந்த தனியார் கருத்தரிப்பு மையத்தில் நடந்த முறைகேடுகள் கண்டுபிக்கப்பட்டு அதற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அவலங்கள் இனி நடக்கக் கூடாது என்பதற்காகத்தான் அரசு சார்பில் எழும்பூர் மருத்துவ மனையில் செயற்கை கருத்தரிப்பு மையத்தை தொடங்கி வைத்துள் ளோம். 8 படுக்கைகள் கொண்ட அதிநவீன பிரசவ அறை இங்கு அமைக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் கூட இல்லாத அளவுக்கு தரமாக கட்டமைக்கப் பட்டுள்ளது.
மதுரையில் 2ஆவது கருத்தரிப்பு மையம் தொடங்க பணி கள் நடைபெற்று வருகின்றன என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு, மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன் தீப் சிங் பேடி, அரசு சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணி ராஜன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருவுறாமைக்கான காரணங்கள்
உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, உடல் பருமனாக இருப்பது, உணவு பழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் உள்ளிட்டவை கருவுறாமல் இருப்பதற்கான காரணங்கள். 3.9 விழுக்காடு கருத்தரிப்பு பிரச்னை 30 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கு இருப்பதாக தெரியவந்துள்ளது. செயற்கை கருத்தரிப்புக்கு ரூ.7 முதல் ரூ.10 லட்சம் செலவாகும் நிலையில் இங்கு முழுவதும் இலவசமாக செய்யப்படுகிறது.