tamilnadu

img

நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஏரியா சபை -தமிழக அரசின் உத்தரவிற்கு சிபிஎம் வரவேற்பு

ஊரக உள்ளாட்சிகளில் கிராம சபை போன்று நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஏரியா சபை என்ற தமிழக அரசின் உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடத்துவது போன்று நகர்ப்புற உள்ளாட்சி வார்டுகளிலும் ஏரியா சபை அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்தி வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி பொறுப்பில் இருந்த மேற்கு வங்கம், திரிபுராவில் வார்டு சபைகள் இயங்கி வந்தன. தற்போதுள்ள கேரள இடது ஜனநாயக முன்னணி அரசிலும் இத்தகைய வார்டு சபைகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

சமீபத்தில் கட்சியின் 23வது மாநில மாநாடு மார்ச் 30, 31, ஏப்ரல் 1 ஆகிய தேதிகளில் மதுரையில் நடைபெற்ற போது, அது குறித்து தீர்மானத்தை நிறைவேற்றி மாநில அரசின் கவனத்திற்கும் கொண்டு சென்றது. தற்போது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் ஏரியா சபை அமைக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வரவேற்கிறது, பாராட்டுகிறது.

மக்கள் கருத்துக்களை அறிந்து உள்ளாட்சி அமைப்புகளை செயல்படுத்த இந்த ஏரியா சபைகள் அதிகாரம் கொண்டதாக சிறப்பாக செயல்படும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டுமென்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.