சென்னை, அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் நடத்திய நிகழ்ச்சிக்கு முற்போக்கு இயக்கங்கள் கண்டனம் எழுப்பி வருகின்றனர்.
சென்னை, அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி அறிவியலையும், பகுத்தறிவையும் போதிப்பதற்கு மாறாக, மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும் என மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் நிகழ்ச்சி நடத்தியிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேசன் எனும் அமைப்பு சார்பில் கலந்து கொண்டு உரையாற்றிய மகாவிஷ்ணு என்ற நபர், மாணவர்களிடையே முன் ஜென்மம், மறுபிறவி, பாவம், கர்மா என அறிவியலுக்கு மாறான விசயங்களை பேசியிருக்கிறார். அப்போதே ஆசிரியர் ஒருவர் இது அரசுப்பள்ளி, மாணவர்களிடையே ஏன் பாவம், முன் ஜென்மம், மறுபிறவி என்று ஆன்மிகவாதி போல் பேசிகொண்டு இருக்கிறீர்கள் என கேட்டதற்கு, அரசுப்பள்ளியில் ஆன்மீகம் பேசக்கூடாதா? என அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காணொலி தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அரசுப்பள்ளியில் இதுபோன்று அறிவியலுக்கு புறம்பான விசயங்களை போதிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித்துறை எப்படி அனுமதி வழங்கியது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இவ்விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க முற்போக்கு இயக்கங்கள் வலியுறுத்தியுள்ளன.