tamilnadu

img

விமானப்படை பாதுகாப்பு அலுவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

ஆவடி விமான பயிற்சி படை வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை பாதுகாப்பு அலுவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் காளிதாஸ்(55). இவர் சென்னை ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, விமானப்படை குடியிருப்பில் வசித்து வந்தார். இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது ஆவடி விமானப் படையில் பாதுகாப்பு அலுவலராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஜீவஸ்ரீ. இவர்களுக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

காளிதாஸ் கடந்த இரு நாள்களாக 8 ஆம் எண் கொண்ட விமானப்படை டவரில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், இன்று அதிகாலை 3:55 மணியளவில் பணியில் இருந்த போது, அவர் பயன்படுத்தி வந்த 'ஏ. கே. 47' ரக துப்பாக்கியால் தனது தொண்டையில் சுட்டுக் கொண்டதில் மூன்று குண்டுகள் பாய்ந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து இறந்தார். இது குறித்து ஆவடி முத்தாபுதுப்பேட்டை காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு உடல்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது