சென்னை, செப். 28 - மயிலாப்பூர் நிதிநிறுவன மோசடி வழக்கில் ஆரம்பகட்ட குற்றப்பத்திரிகையை காவல்துறை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு மூர்த்தி வலியுறுத்தினார். மயிலாப்பூர் நிதிநிறுவன மோசடி வழக்கில் அதன்இயக்குநர் தேவநாதன் யாதவ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பான புலன் விசாரணையை பொருளாதார குற்றப்பிரிவு நடத்தி வருகிறது. இதனையொட்டி மயி லாப்பூர் நிதி நிறுவன பாதிக்கப்பட்ட வைப்பீட்டாளர்கள் சங்கத்தின் சார்பில் சனிக்கிழமையன்று (செப்.28) தி.நகரில் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் மோகன் தலை மையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பேசிய வழக்கறிஞர் திரு மூர்த்தி, “நிதிநிறுவன வழக்குகளில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய காலதாமதம் ஆவதால், குற்றவாளிகள் வெளியே வந்து விடுகின்றனர். எனவே, பூர்வாங்க குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் ஒருங்கிணைப்பு குழுவிடம் முழுமையான உண்மையான தகவல்களை, ஆதா ரங்களை, ஆவணங்களை தர வேண்டும்” என்றார். இந்த வழக்கை விசாரித்து வரும் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி அலெக்சாண்டர் பேசுகையில், “வைப்பீட்டாளர்கள் 4066 பேரிடம் புகார்கள் பெறப்பட்டுள்ளது. 462 கோடி மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது. ஒரே நபர் 4 விதமாக புகார் தருவதை தவிர்க்க வேண்டும். புகார்தாரர்கள் அனைவரிடம் இருந்தும் வாக்கு மூலமும் பெறப்பட்ட பிறகே பணம் கிடைக்கும். அனைவருக்கும் இழப்பீடு தொகையை கண்டிப்பாக பெற்றுத் தருவோம்” என்றார்.