சென்னை:
வெங்காய விலை ஏற்றத்தால் தாய்மார் கள் கண்ணீர் வடித்துவரும் நிலையில், அதிமுக அரசு அதைக் கண்டு களிநடனம் புரிகிறது என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வெங்காய உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பெய்துவரும் கனமழையின் காரணமாக வெங்காய வரத்து வெகுவாக குறைந்துள்ளது.இதனால் கோயம்பேடு உள்ளிட்ட மொத்த விற்பனை சந்தைகளிலும் வெங்காயம் கிலோ ஒன்றிற்கு 100 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாட்டில் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும், தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு பசுமைக் கடைகளில் இறக்குமதி செய்யப் பட்டுள்ள வெங்காயம் கிலோ 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.இந்நிலையில், கூட்டுறவு பசுமைக் கடைகள் அற்ற பகுதிகளில், வெங்காயம் வாங்க பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளா கின்றனர்.
ராக்கெட் வேகத்தில் ஏறும் விலையால் பலரும் கண்ணீர் வடிக்கின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின், “வெங்காயம் கிலோ ரூ.130. நெல்மணிகள் நனைந்து விவசாயிகளும், வெங்காய விலையால் தாய்மார்களும் கண்ணீர் விட, களிநடனம் போடுகிறது அதிமுக அரசு!வேளாண் சட்டங்களால் பதுக்கல் அதிகமாகும்; விலை ஏறும்! வெங்காயத்திலும் ஊழல் வேண்டாம்! அனைவருக்கும், நியாய விலையில் வெங்காயம் கிடைக்க நடவடிக்கை தேவை!” எனக் குறிப்பிட்டுள்ளார்.