சென்னை:
நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், வி. பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வரும் நவம்பர் 3-ஆம் தேதி முதல் விசாரிக்கிறது.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலை ஒத்திவைத்து சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப் பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், திட்டமிட்டபடி தேர்தலை ஜூன் 23 ஆம் தேதியன்று நடத்தவும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பெஞ்சமின், ஏழுமலை ஆகியோர் தங்களை வாக்களிக்க அனுமதிக்காததால் இந்த தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என கோரி வழக்குத் தொடர்ந்திருந்தனர்.மேலும் தமிழக அரசின் தனி அதிகாரி நியமனத்தை ரத்து செய்யக் கோரி நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோரும் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் தேதி நடந்த தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார்.மேலும் நடிகர் சங்கத்துக்கு 3 மாதங்களுக்குள் மீண்டும் தேர்தலை நடத்த உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து, நடிகர் விஷால் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இருதரப்பினரும் சுமூகத் தீர்வு காணவேண்டும் என அறிவுறுத்தி, நடிகர் சங்கத்துக்கு மறு தேர்தல் நடத்துவதா அல்லது கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டுமா என்பது குறித்து இரு தரப் பினரும் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
ஆனால் உயர் நீதிமன்றத்தின் அறிவுரையை ஏற்று இருதரப்பும் சுமூகமாகச் செல்ல மறுப்பதால், இந்த வழக்கை மேற்கொண்டு விசாரிக்க விரும்பவில்லை என கருத்து தெரிவித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, வழக்கை வேறு நீதிபதிகள் அமர்வுக்கு முன் விசாரணைக்குப் பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்திருந்தனர்.இதனையடுத்து தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி உத்தரவின்படி, நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், வி. பவானி சுப்பராயன் ஆகியோர் அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டன. அப்போது அனைத்து தரப்பிலும் வாதங்களுக்கு தயாராக இருப்பதாகவும் வழக்கை காணொலிக் காட்சி மூலம் விசாரிப்பதற்கு பதிலாக நேரடி விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.இதனையடுத்து விசாரணையை வரும் நவம்பர் 3 ஆம் தேதி முதல் தொடங்குவதாக அறிவித்தனர். அதுவரை, 3 மாதங்களில் நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்தபிறப்பித்த உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.