tamilnadu

img

அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்க! - சிபிஎம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 2022 ஜூலை 21, 22 ஆகிய தேதிகளில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூர்முகமது தலைமையில் தர்மபுரியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ. வாசுகி மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நிறைவு நாள் கூட்டமான இன்று அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது. 
அரிசி, கோதுமை, பருப்பு வகைகள், மாவு வகைகள், வெல்லம், மோர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5 சதவிகிதம் விதிக்கப்பட்டு அமலுக்கு வந்து விட்டது. ஒன்றிய அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கை, எளிய மக்களின் அன்றாட வாழ்க்கையைக் கடுமையாக சீர்குலைக்கும். இது பேக் செய்யப்படாத, உதிரியாக வாங்குகிற பொருட்களுக்கு அமலாகாது என்ற நிதி அமைச்சர் விளக்கம் எடுபடவில்லை. கார்ப்பரேட்டுகளுக்கு வாரி வழங்குவதும், உழைப்பாளி மக்களின் வாழ்வை ஒழித்து கட்டுவதுமான நவீன தாராளமய பாதையில் மோடி அரசு மேலும் மேலும் தீவிரமாக முன்னேறி செல்வதன் விளைவே இது. இச்சூழலில் ஏழை குடும்பங்களின் வாழ்வை பாதுகாக்க, 2022 ஜூலை 29ம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் மத்திய அரசு அலுவலகங்கள் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட சிபிஐ (எம்) மாநிலக்குழு முடிவு செய்துள்ளது. இவ்வியக்கத்தில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு ஒன்றிய அரசிற்கு எதிராக கண்டக்குரல் எழுப்பிட மாநிலக்குழு வேண்டுகிறது.