சென்னை, ஆக. 28 - “மாநகராட்சிகளில் தனி யார்மயத்தை முழுமையாக கைவிட்டு, தூய்மைப் பணியில் உள்ள அனைத்து தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலி யுறுத்தினார்.
சென்னை பெருநகர மாநகராட்சியில் பணி யாற்றும் தூய்மைப் பணி யாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், ஒப்பந்த பணி யாளர்களுக்கு மாதம் 28 ஆயிரம் ரூபாய் குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டும், தொழில் உரிமக் கட்டணம், தொழில் வரி, சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும்; மாநகராட்சிப் பணிகளை தனியார்மயமாக்க கூடாது, ‘ஆக்கிரமிப்பு’ என்ற பெயரில் தெருவோர வியா பாரிகள் வாழ்வாதாரத்தை அழிக்க கூடாது, சென்னை (மாநகராட்சி) பள்ளிகளை மூடக்கூடாது என வலி யுறுத்தி புதனன்று (ஆக.28) சென்னை மாநகராட்சி அலு வலகமான ரிப்பன் மாளிகை அருகே மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது.
வாக்குவாதம் - கைது!
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்த காவல்துறையினருடன் தலைவர்கள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
முன்னதாகப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி, மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:
கோரிக்கை வைக்க முடியுமா?
இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநகராட்சியாக சென்னை மாநக ராட்சி உள்ளது. இந்த மாநகராட்சி, தூய்மைப் பணி அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தற்போது எஞ்சியுள்ள 4 மற்றும் 5-ஆவது மண்டலங்களின் துப்புரவுப் பணிகளையும் தனியாருக்கு விடப் போகிறார்கள்.
தூய்மைப்பணி தனியார்மயத்தால் ஒப்பந்ததாரருக்கு தான் அதிக லாபம் கிடைக்கும். ஒப்பந்ததாரர் களுக்கு மாநகராட்சி பணத்தை கொடுத்து, அவர்கள் வாயிலாக தொழி லாளர்களுக்கு 200 - 300 ரூபாய் ஊதியம் தருகின்றனர். எஞ்சிய பணத்தை ஒப்பந்ததாரர்கள் கொள்ளையடிக் கின்றனர். தூய்மைப் பணியை அடித்தட்டு மக்கள் செய்கின்றனர். இவர்களது நிரந்தரப் பணி, ஊதியம் ஆகியவற்றை பறித்து ஒப்பந்தத் தொழிலாளியாக மாற்றுவது என்ன நியாயம்?
ஒப்பந்தத் தொழிலாளியால் சங்கம் வைக்க முடியாது, கோரிக்கை எழுப்ப முடியாது. தனியார்மயத்தால் மாநகரத்தின் சுகாதாரமே பாதிக்கும்.
எனவே, தனியார்மயத்தை முழுமையாகக் கைவிட்டு, தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
மாநகராட்சியின் முக்கியப் பணியே தூய்மைப் பணி தான். அதையே காண்ட்ராக்ட் விடுகிறார்கள். மின்சார பராமரிப்பு; விநியோகம், குடிநீர் விநியோகம் என அனைத்தையும் காண்ட்ராக்ட் விடுகிறார்கள். பிறகு ரிப்பன் மாளிகை எதற்கு, என்ற கேள்வி எழுகிறது. தனியார்மயம் என்பது அநாகரிமான போக்கு. ஆபத்தான கொள்கை என்பதால் அதை எதிர்க்கிறோம். எனவே, தனி யார்மயத்தை ரத்து செய்ய வேண்டும்.
தொழில் வரி, சொத்து வரி போன்ற வற்றை மாநகராட்சி பல மடங்கு உயர்த்தி உள்ளது. இதனால் ஏழை - எளிய, நடுத்தரக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டம் நடத்த விடாமல் தடுக்கும் காவல்துறை அதிகாரிகளின் வீடுகளுக்கும் சொத்து வரி உயர்த்தக் கூடாது என்று தான் போராடுகிறோம்.
முதல்வருக்கு வலியுறுத்தல்
திமுக ஆட்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தருகிறது. மோடி அரசை எதிர்த்த போராட்டத்தில் திமுகவும், அதன் தலைவர் மு.க. ஸ்டாலினும் ‘இந்தியா’ கூட்டணியில் மகத்தான பங்களிப்பு செய்கின்றனர். இந்த நிலையில், அனைத்தையும் தனியார்மயமாக்கும் ஒன்றிய அரசின் கொள்கையை சென்னை மாநகராட்சி நிறைவேற்றுவதை அனுமதிக்கக் கூடாது என்று முதலமைச்சரிடம் வற்புறுத்துகிறோம்.
மாமன்றத்தின் நடவடிக்கைகள் மிக மோசமான பாதிப்புகளை உரு வாக்கும். சமூக நீதிக்கு குரல் கொடுப்ப தில் முதலமைச்சர் முன்னணியில் நிற்கிறார். அனைத்து பணிகளையும் தனியார் மயமாக்கினால் சமூக நீதி கோட்பாடு அமலாகாது என்பதை உணர வேண்டும்.
பள்ளிகளை மூடலாமா?
புதிய புதிய பள்ளிகளை திறந்து, இந்தியாவிலேயே கல்வித்துறையில் தமிழகம் முன்னணியில் நிற்கிறது. அவ்வாறிருக்கையில், மாநகராட்சி நிர்வாகம் பள்ளிகளை மூடுவதால் யாருக்கு அவப்பெயர் ஏற்படும்? மாண வர் சேர்க்கை இல்லை என்றால், பள்ளி களின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். மாறாக பள்ளிகளை மூடுவது, கல்விக்கண்ணைப் பறிப்பதாக அமையும். தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்களைத் தள்ளினால் எவ்வளவு பேர் படிப்பார்கள்? மாணவர்களின் கல்வி யில் மண்ணை அள்ளிப் போடும் வேலையை மாநகராட்சி செய்யக் கூடாது. மூடுவதாக அறிவிக்கப்பட்ட பள்ளிகளை தொடர்ந்து நடத்தவேண்டும்.
நடைபாதை வியாபாரிகளின் பிரச்சனையை தீர்க்க வேண்டும். மாநகராட்சி மேயர், ஆணையர் அழைத்துப் பேசி பிரச்சனைக்கு தீர்வு காணாவிடில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் போராட்டம் நடத்தும். இதர அரசியல் கட்சிகள், குடியிருப் போர் சங்கங்களை இணைத்து மாபெரும் போராட்டத்தை நடத்தும்.இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் பேசினார்.
சாலையோர வியாபாரிகளே நகரத்தின் அழகு!
மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் பேசுகையில், “சென்னை நகரத்தின் அழகே சாலையோர வியாபாரிகள் தான்.
அனைத்து மாநகரங்களிலும் சாலையோர வியாபாரிகள் உள்ளனர். அடாவடியாக அவர்களை அகற்றுவதை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஏற்கவில்லை; அவற்றை அனுமதிக்காது. மாநகராட்சியை எதிர்த்து இது முதற்கட்டப் போராட்டம்” என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என். குணசேகரன், மாவட்டச் செய லாளர்கள் ஜி. செல்வா (மத்திய சென்னை), எல். சுந்தர்ராஜன் (வட சென்னை), ஆர். வேல்முருகன் (தென் சென்னை), மாநிலக்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினர்கள் ஆர். ஜெயராமன், பி. விமலா, ஆ. பிரியதர்ஷினி, எம். சரஸ்வதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.