tamilnadu

img

தலைமறைவான ராஜேந்திர பாலாஜி மீது மேலும் 3 புகார்கள்  

ரூ.3 கோடி மோசடி வழக்கில் சிக்கி தலைமறைவாகியிருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது, மேலும் 3 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.    

கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி பல்வேறு நபர்களிடம் ரூ 3 கோடி வரை பெற்றுள்ளார். மேலும் வேலையும் வாங்கி தராமலும், பெற்ற பணத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றியதாக ரவீந்திரன் மற்றும் விஜய் நல்லதம்பி ஆகியோர் குற்றம் சாட்டினர். அதன்பிறகு விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் ரவீந்திரன் மற்றும் விஜய் நல்லதம்பி ஆகியோர் புகார் அளித்ததின் பேரில் ராஜேந்திர பாலாஜி மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.      

இதனை அடுத்து கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி முதல் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக உள்ளதாக விருதுநகர் காவல்துறையினர் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் தேடி வருகின்றனர்.  

அதனைதொடர்ந்து கடந்த 23 ஆம் தேதி தான் ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்கும் விதமாக, விமான நிலையங்களுக்கு காவல்துறை தரப்பில் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது.  

இந்நிலையில் மேலும் 3 பேர் புகார் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த மனுக்களைப் பெற்றுள்ள காவல்துறை, புகாரில் உள்ள முகாந்திரம் குறித்து ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த புகார் மீது விரைவில் வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.