tamilnadu

வயநாடு பேரிடர்: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 100 வீடுகள்

சென்னை, ஆக. 12- வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு வணிகர் பேரமைப்பின் சார்பில் 100 வீடுகள் கட்டித்தருவதாக கேரள முதல்வரை சந்தித்து தெரிவித்தனர். இதுகுறித்து பேரமைப்பின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு வணிகர்களுக்காக மட்டுமன்றி, பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் பல்வேறு வகைகளில் அவ்வப்போது நலத்திட்டங்கள் மூலம் உதவிக்கரம் நீட்டி வருகிறது. இயற்கைச் சீற்றம், தீ விபத்துக்கள், பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் வணிகர்கள், நுகர்வோர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உதவிக்கரம் நீட்டி உறுதுணையாய் இருந்ததை கடலூர், சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட புயல், கனமழை பேரிடர் சமயங்களில் பல்வேறு வகைகளில் உணவுப் பொருட்களாகவும், நிதி உதவியாகவும் வழங்கி வந்திருக்கிறது.

அந்த வரிசையில் தற்போது கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட கொடூர மற்றும் கோரச் சம்பவமான பெருமழை நிலச்சரிவால் ஒருசில ஊர்களே காணாமல் போயுள்ளன. அதில் மிகப்பெரிய சோகம் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதுடன் ஆயிரக்கணக்கானோர் வீடு, உடமைகளை இழந்து நிராதரவாக நிற்கின்ற நிலை மிகவும் வருத்தத்திற்குரியது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நீலகிரி மாவட்ட நிர்வாகிகளின் உந்துதலால், வயநாடு பேரிடரில் வீடு இழந்த 100 பேருக்கு வீடுகள் கட்டித்தர பேரமைப்பு ஆயத்தமாய் இருக்கிறது என்பதை கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் அவர்களிடம் பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில், மாநிலப் பொதுச் செயலாளர் வெ.கோவிந்தராஜுலு, பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா, தலைமைச் செயலாளர் பேராசிரியர் ஆர்.ராஜ்குமார், கோவை மண்டலத்தலைவர் சூலூர் டி.ஆர்.சந்திரசேகரன், கன்னியாகுமரி மண்டலத் தலைவர் டி.பி.வைகுண்டராஜா, நீலகிரி மாவட்டத் தலைவர் கே.முகம்மதுபாரூக், மாநிலத் துணைத்தலைவர் ஏ.ஜெ.தோமஸ், கன்னியாகுமரி மேற்கு மாவட்டத் தலைவர் ஏ.அல்அமீன், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத் தலைவர் கே.பாபு மற்றும் நிர்வாகிகள் வெள்ளியன்று நேரில் சந்தித்து தெரிவித்தனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் 100 வீடுகள் கட்டித்தரும் இந்த முயற்சிக்கு கேரள மாநில அரசு அனைத்து ஆதரவையும், ஒத்துழைப்பையும் அளித்து உதவுவதாக கேரள முதல்வர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.