tamilnadu

சிறுமியை கடத்தி திருமணம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை

வேலூர்.ஏப்.30-வேலூர் அருகே 17 வயது சிறுமியைக் கடத்தி திருமணம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் விரைவு மகளிர் நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. விழுப்புரம் மாவட்டம், இலங்காடு ஏரிக்கரைத் தெருவைச் சேர்ந்த பெருமாளின் மகன் பிரபு(41). அவர் வேலூரை அடுத்த கரசமங்கலத் திலுள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார். அப்போது, அதே செங்கல் சூளையில் பணியாற்றி வந்த 17 வயது சிறுமியுடன் பிரபுவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த 2016-ஆம் ஆண்டு மே 15-ஆம் தேதி பிரபு ஆசைவார்த்தை கூறி அந்தச் சிறுமியை கடலூர் மாவட்டம் மஞ்சகுப்பத்துக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து அங்கேயே 2 மாதங்கள் குடும்பம் நடத்தி வந்தனர்.இதனிடையே, தனது மகளைக் காணவில்லை என சிறுமியின் பெற்றோர் லத்தேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். 2016 ஜூலை மாதம் காட்பாடி பேருந்து நிறுத்தம் அருகே பிரபுவை காவல்துறையினர் கைது செய்து சிறுமியை மீட்டனர். இந்த வழக்கு விசாரணை வேலூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.செல்வம், குற்றம்சாட்டப்பட்ட பிரபுவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து திங்கள்கிழமை தீர்ப்பளித்தார். இதையடுத்து, பிரபு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

;