அறிகுறியற்றவர்களிடம் இருந்து கோவிட்-19 தொற்று பரவுவது அரிது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 71,99,611 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,08,737 ஆக உயர்ந்துள்ளது. நேற்று நிலவரப்படி, உலக அளவில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 1,36,000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், உலக நாடுகள் ஆறு மாத காலத்திற்கு தொற்று தடுப்பு நடவடிக்கையில் இருந்து பின் வாங்க வேண்டாம் என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறியுள்ளார். மேலும், அறிகுறியற்றவர்களிடம் இருந்து கோவிட்-19 தொற்று பரவுவது அரிது என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. தற்போது உலக அளவில் தொற்று பரவலின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் கவலை தெரிவித்துள்ளது. மேலும், மத்திய அமெரிக்காவை பொறுத்த அளவில், நோய் பரவல் உச்சக்கட்டத்தினை எட்டவில்லை என்றும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.