கோவையில் கோழிப்பண்ணையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் தீக்கிரையாகின.
கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஆம்போதி கிராமத்தில் கணேஷ்குமார் என்பவருக்கு சொந்தமாக 2 கோழிப்பண்ணைகள் இருந்தன. இதில் ஒரு பண்ணையில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி மற்றொரு பண்ணையிலும் தீ பரவி கொளுந்துவிட்டு எரிந்தது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் தீக்கிரையாகின.
இச்சம்பவம் தொடர்பாக அன்னூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.