தமிழகத்தின் முதல் வனவிலங்கு மீட்பு மறுவாழ்வு மையம்
சிறுமுகையில் 123 ஏக்கர் பரப்பளவில் கட்டமைப்பு
- சரவணபாபு - மேட்டுப்பாளையம், ஏப்.28- தமிழகத்தின் முதல் வனவிலங்கு மீட்பு மறுவாழ்வு மையம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனப்பகுதியில் ரூபாய் 19 கோடி செலவில் 123 ஏக்கர் பரப்பளவில் கட்டமைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட மோதூர் வனப்பகுதியில் வனவிலங்கு மீட்பு மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக கட்டமைக்கப்பட்டுள்ள இந்த மையம் ரூபாய் 19 கோடி செலவில் வனத்தின் நடுவே 123 ஏக்கர் பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் அமைந்துள்ளது. நோய் வாய்பட்ட மற்றும் காயமடைந்த வனவிலங்குகளுக்கு இங்கு சிகிச்சையளிக்கப்பட உள்ளது. யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், குரங்கு, காட்டெருமை என பாதிப்பிற்குள்ளாகும் அனைத்து வகை வன உயிரினங்களுக்கும் உரிய சிகிச்சை மற்றும் அவை குணமாகும் வரை மறுவாழ்வு மையத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட உள்ளன. விலங்குளுக்கான அறுவை சிகிச்சை அரங்கு எனும் ஆப்ரேஷன் தியேட்டர், சிகிச்சை கூடம், ஒவ்வொரு வனவிலங்குகளும் ஓய்வு எடுக்க தனித்தனியாக பாதுகாப்பு கம்பி வேலியுடன் விலாசமான கூண்டு அறைகள், நீர் அருந்தவும் இயற்கையான முறையில் குளித்து மகிழ நீச்சல் தொட்டிகள், பெரிய யானைகளுக்கும் குட்டி யானைகளுக்கும் பயிற்சி அளிக்கும் கிரால் அமைப்புகளும் உள்ளன. மேலும், இந்த மறுவாழ்வு மையத்தில் பணியாற்ற உள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள், பணியாளர்கள் தங்க அறைகள், குடியிருப்புகள் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இயற்கை சூழல் மாறாதிருக்க வனத்தின் நடுவே இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளதால் காட்டில் உள்ள பிற வன விலங்குகள் உள்ளே நுழையாமல் இருக்க மையத்தை சுற்றி அகழி வெட்டப்பட்டு இரண்டடுக்கு தொங்கும் சோலார் மின் வேலி மற்றும் மையத்தை சுற்றி கண்காணிப்பு கோபுரங்களும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஏறத்தாழ அனைத்தும் பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளதால் மிக விரைவில் இந்த மையம் வனவிலங்குகளின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது.