ஒன்றிய அரசு ஏற்கனவே பெட்ரோல், டீசல், கேஸ் விலையை உயர்த்தி, அடுப்பை பத்த வைக்காமலேயே மக்களின் வயிறெரிய செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது தக்காளி விலையும் தாறுமாறாக உயர்ந்து கிலோ ரூ 100 தொட்டிருக்கிறது. விலையை கேட்டாலே மக்களின் முகம் சிவக்கிறது.
ஆப்பிளோடு தக்காளி போட்டியில் இருக்கிறது. ஆப்பிள் என்றால் ஆசைக்கு சாப்பிடுவது என தவிர்த்து விடலாம். ஆனால் தக்காளியோ அன்றாட உணவில் தவிர்க்க முடியாததாக மாறியிருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் எங்களின் வாழ்நிலை அதோ கதிதான் என வயிற்றெரிச்சலை கொட்டி தீர்க்கின்றனர் கோவை மக்கள்.
மழைக்காலம் தொடங்க இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், கோவையில் தற்போதே தக்காளி விலை செஞ்சரி அடித்து நிற்கிறது. மழை காலம் தொடங்கினால் எங்கே போய் நிற்கும் என தெரியவில்லை. மொத்த விலை முழி பிதுங்க வைக்கிறது என்றால் சில்லறை விலை மக்களை தெறிக்க விடுகிறது.