நீதிபதி குடியிருப்பில் சந்தன மரங்கள் திருட்டு
கோவை, ஜூன் 12-
கோவை, பந்தயசாலையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பு வளாகத்தில் 4 சந்தன மரங்கள் வெட்டப்பட்டு திருட்டபட்ட சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை பந்தய சாலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சந்தன மரங்கள் அதிக அளவில் உள்ளன. காமராஜர் சாலையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பு வளாகத்திலும் சந்தன மரங்கள் உள்ளன. இந்நிலையில் குடியிருப்பு வளாகத்தில் நன்கு உயரமாக வளர்ந்திருந்த 4 மரங்களை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி திருடி சென்றுள்ளனர். சந்தன மரங்கள் வெட்டப்பட்டு இருப்பதை அறிந்த நீதிபதி ஒருவரின் உறவினர், பாதுகாப்பில் இருந்த பாரா காவலரிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அப்பகுதிக்கு வந்த பந்தய சாலை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது 5 மரங்களை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி, 4 மரங்களை கடத்திச் சென்று விட்டு ஒரு மரத்தை விட்டுச் சென்றுள்ளது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.