பிளஸ் டூ மாணவன் மர்ம மரணம்
கோவை, ஏப்.18– சிங்காநல்லூர் அருகே 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சிங்காநல்லூர் அருகே பள்ளபாளையம் வாரியில் உள்ள மானசரோவர் குடியிருப்பைச் சேர்ந்த பிரசன்ன பாலாஜி என்பவரின் மூத்த மகன் ரித்விக் (17). அப்பகுதி யில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். பிரசன்ன பாலாஜி இரண்டு நாட்களுக்கு முன்பு உறவினர் ஒருவரின் துக்க வீட்டிற்குச் சென்றி ருந்த நிலையில், வெள்ளியன்று மதியம் அவர் வீடு திரும்பியபோது, ரித்விக் படுக்கை அறையில் சுயநினை வின்றி கிடந்துள்ளார். உடனடியாக அதிர்ச்சியடைந்த பிர சன்ன பாலாஜி, மகனை அருகில் உள்ள தனியார் மருத்து வமனைக்கு கொண்டு சென்றார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி ரித்விக் பரிதாபமாக உயிரி ழந்தார். இதுகுறித்து பிரசன்ன பாலாஜி சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதனிடையே, வியாழ னன்று மதியம் வீட்டில் வாந்தி எடுத்த நிலையில் படுக் கைக்குச் சென்ற ரித்விக் அதன் பிறகு மயக்கமடைந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மாணவன் விஷம் அருந்தி இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து சிங்காநல்லூர் போலீசார் தீவிர விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மரக்கன்றுகள் நடும் விழா
சேலம், ஏப்.18- சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி கலந்து கொண்டு 100 மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தமிழ்நாடு சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சேலம் செட்டிச்சாவடி பகுதியில் மரம் நடும் விழா வெள்ளியன்று நடைபெற்றது. சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி கலந்து கொண்டு 100 மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டப்பணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர் கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திறனறித் தேர்வு: தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவிகளுக்கு வாழ்த்து
தேசிய திறனறித் தேர்வில், தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. சேலம் மாவட்டம், மணிகாரம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த 4 மாணவிகள், தேசிய திறனறித் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அதன்படி, பெ.கனிஷ்கா - 126, சி.திவ்யபிரிய - 112, ஜெ.சுபஸ்ரீ - 103, அ.தேன்மொழி - 74 ஆகியோர் 4 ஆண் டுகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1000 சிறப்பு உதவித் தொகை பெறவுள்ளனர். இந்நிலையில், வெள்ளியன்று தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு ஊராட்சி பொதுமக் கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து, உதவித்தொகை வழங்கினர்.
அரசு நிலத்தை மீட்க வலியுறுத்தல்
கோவை, ஏப்.18- அரசு நிலத்தை தனியாரிடமிருந்து மீட்க வேண்டும், என வலியுறுத்தி தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். கோவை மாவட்டம், மதுக்கரை அருகே உள்ள மயிலேரிபாளையம் ஊராட்சியில் சுமார் 80 சென்ட் அரசு நிலம் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதனை மீட்டு, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 16 பட்டியலின பெண் பயனாளிகளுக்கு குடியிருக்க வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், என வலியுறுத்தி தமிழ் புலிகள் கட்சியினர் மதுக்கரை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பலர் கலந்து கொண்டனர்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை
தருமபுரி, ஏப்.18- பாலக்கோடு சாலையை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும், என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ள னர். தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் சாலையின் இரு புறமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பாப்பாரப் பட்டி கூட்டுரோடு முதல் காவல் நிலையம் வரையும், ஸ்தூபி மைதானம் முதல் கல்கூடஅள்ளி மேம்பாலம் வரையும், புற வழிச்சாலை தக்காளி மார்கெட் முதல் நான்கு ரோடு வரையும் உள்ள நெடுஞ்சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் ஆட்டோக்கள், மினி லாரிகள் சாலையில் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் போக்குவரத் திற்க்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் அவசர சிகிச்சைக்காக செல்லும் 108 ஆம்புலன்ஸ் வாகனங் கள், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்கிறது. பொது மக்கள் நடந்து செல்லுவதில் கூட சிரமம் ஏற்படுகிறது. எனவே, துரித நடவடிக்கை மேற்கொண்டு நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும், என வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.