கோவையில் 1888ஆம் ஆண்டு முதல் பஞ்சாலை தொடங்கப் பட்டது. அது, சி.எஸ்.டபிள்யு. (கோயம்புத்தூர் ஸ்பின்னிங் அண்ட் வீவிங் மில்ஸ்) என்று அழைக்கப்பட்ட சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்ற ஆங்கிலேய தொழிலதிபரால் தொடங்கப்பட்ட ஸ்டேன்ஸ் மில் ஆகும். பஞ்சாலைத் தொழிலுக்கு மட்டுமின்றி கோவை யின் தொழில் வளர்ச்சிக்கும் வித்திட்டது ஸ்டேன்ஸ் மில் தான். ஸ்டேன்ஸ் மில்லைத் தொடர்ந்து மால் மில், காளீஸ்வரா, ரங்கவிலாஸ், ராதாகிருஷ்ணா மில் என 1930ஆம் ஆண்டு வரையிலும் கோவையில் அடுத்தடுத்து 8 பஞ்சாலைகள் தொடங்கப்பட்டன.
என்டிசி மில்கள்
தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என்பது உள்ளிட்ட காரணங் களைக் கூறி 1974ஆம் ஆண்டு இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் நாடு முழுவதிலும் இருந்த 123 பஞ்சாலைகள் தேசியமயமாக்கப்பட்டன. தற்போது மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் பொதுத்துறை நிறுவனமாக என்டிசி (தேசிய பஞ்சாலைக் கழகம்) செயல்படுகிறது. இதன் வசம் இருந்த ஆலைகளில் 100 பஞ்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. வெறும் 23 பஞ்சாலைகள் மட்டுமே தற்போது செயல்படும் நிலையில் உள்ளன. 23 ஆலை களில் தென்னிந்தியாவில் மட்டும் 15 ஆலைகள் இயங்குகின்றன.
தமிழகத்தில், பங்கஜா மில்ஸ், கம்போடியா மில்ஸ், கோயமுத்தூர் ஸ்பின்னிங் அண்டு வீவிங் மில்ஸ், ஸ்ரீ ரங்கவிலாஸ் மில்ஸ், முருகன் மில்ஸ் என 5 ஆலைகள் கோவையில் செயல்படுகின்றன. சிவகங்கை மாவட்டம் காளை யார் கோயிலில் காளீஸ்வரா மில்ஸ், ராமநாதபுரம் மாவட்டம் கமுதக்குடியில் பயனீர் ஸ்பின்னர்ஸ் ஆகிய மில்கள் தமிழகத்தில் செயல்படும் மற்ற 2 ஆலைகளாகும். கொரோனா தொற்று பரவலுக்கு முன்பு வரை யிலும் செயல்பட்டு வந்த இந்த ஆலைகள் பொது முடக்க காலத்துக்கு பிறகு திறக்கப்படவில்லை. கடந்த 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறி விக்கப்பட்ட முழு முடக்கத்தின்போது ஆலைகள் மூடப்பட்டன. தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்படவில்லை. ஆனால் தற்போது பாதி ஊதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. முழு முடக்கத்தில் இருந்து அரசு விலக்கு அளித்தபோது தனியார் பஞ்சாலைகள் இயங்கத் தொடங்கினாலும் என்டிசி ஆலைகளை அரசு இயக்கவில்லை. தமிழ்நாட்டில் உள்ள 7 ஆலை களிலும் ஒரு ஆலைக்கு சுமார் 300 நிரந்தரத் தொழிலாளர்களும், 200 தினக்கூலி ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணியாற்றி வந்தனர். கோவை ஸ்டேன்ஸ் மில்லில் மட்டும் 200 தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். ஆலை யைத் திறக்க வேண்டும், ஒப்பந்தத் தொழிலாளர் களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். நிரந்தரத் தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த 2 ஆண்டுகளாக ஏராள மான போராட்டங்களில் சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. இருப்பினும் நாடு முழுவதும் உள்ள எந்த ஒரு என்டிசி ஆலை யையும் திறக்க ஒன்றிய மோடி அரசு முன்வரவில்லை.
பணப் பலன் கூட கிடைக்கவில்லை
இதுகுறித்து என்டிசி பஞ்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் குமுறுகிறார்கள். ஒண்டிப்புதூரைச் சேர்ந்தவர் ராதா (45). “நான் எனது 18 ஆவது வயதில் இருந்து என்டிசி பஞ்சாலையில்தான் வேலை செய்து வந்தேன். அப்போதெல்லாம் நிரந்தர ஊழியர் எனும் நடைமுறை இல்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு - பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தான் நிரந்தர ஊழியர் எனும் அங்கீகாரம் கிடைத்தது. என்டிசியில் வேலை செய்தபோது ரூ.18 ஆயிரம் வரை சம்பளம் கிடைத்து வந்தது. ஆலை மூடப்பட்ட பிறகு, தற்போது வண்டிக் கடையில் சாப்பாடு விற்று வருகிறேன். ஒருநாள் சாப்பாடு விற்கும், அடுத்தநாள் விற்காது. மீதமான சாப்பாட்டை மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு இலவசமாக வழங்கிவிடு வேன். இதில் வரும் வருமானத்தைக் கொண்டுதான் அடுத்த நாள் தொழிலையும், குடும்பத்தையும் நடத்தி வருகிறோம். மீண்டும் பஞ்சாலையை இயக்க வேண்டும். எங்களுக்குத் தர வேண்டிய பணப் பலன்களையாவது விரைந்து வழங்க வேண்டும்” என்கிறார். கோவை கம்போடியா மில்லில் பணியாற்றி வந்த ராமசாமி, “எனக்கு 56 வயதாகிறது. கடந்த 30 ஆண்டுகளாக கம்போடியா மில்லில் நூற்புப் பணியில் ஈடுபட்டிருந்தேன். கொரோனாவிற்கு பிறகு வேலைவாய்ப்பு இல்லாததால், எனது ஊரான வெள்ளலூரையொட்டியுள்ள தோட்டங் களுக்கு மண்வெட்டி வேலைக்குச் செல்கிறேன். அதுவும் வாரத்துக்கு இரண்டு நாள் மட்டுமே கிடைக்கிறது. ஆலைகளை மீண்டும் திறந்து நடத்த வேண்டும் என்று போராடி வருகிறோம். ஆலைகளை நடத்தாவிட்டாலும், என்னைப் போன்ற என்டிசி தொழிலாளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு விரைந்து வழங்க வேண்டும். அந்தத் தொகை யை வைத்து காய்கறிக் கடை வைத்தாவது நான் பிழைத்துக் கொள்வேன்” என்கிறார்.
நிரந்தரமற்ற வேலை
கோவை முருகன் மில்லில் பணியாற்றி வந்த முரளிதரன், தற்போது தனியார் பஞ்சாலையில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருகிறார். அவர் கூறுகையில், தனியார் பஞ்சாலைகளில் வேலை நிரந்தரமில்லை. ஓய்வூதியம், பி.எஃப். பிடித்தம் இல்லை. தனியார் ஆலைகள் கட்டுப்பாடின்றி இயக்கப்படுவதால், ஓய்வின்றி வேலை செய்ய வேண்டியுள்ளது. வட இந்திய தொழிலாளர்க்கு உணவும், தங்குமிடமும் கொடுத்து மிகக் குறைந்த ஊதியம் வழங்கினால் போதும் என்று பணியாற்றுகின்றனர். ஆனால் என்டிசியில் பணி நிரந்தரமாக இருக்கும் என்பதை நம்பி, வீட்டுக் கடன், குழந்தைகளின் கல்வி உள்ளிட்டவற்றுக்கு கடன் பெற்றுள்ள என்னைப் போன்றவர்களால் குறைந்த ஊதியத்தைப் பெற்று குடும்பத்தைச் சமாளிப்பது சவாலாக உள் ளது. தனியார் ஆலைகளில் தொழிலாளர்கள் சட்டங்கள் எதுவும் அமல்படுத்தப்படுவதில்லை. என்டிசி ஆலைகளில் பணி நேரம் தொடங்கும் 30 நிமிடங்களுக்கு முன்பும், பணி முடிந்த 30 நிமிடங்கள் வரையிலும் எந்த ஒரு விபத்து ஏற் பட்டாலும் என்டிசி நிர்வாகமே பொறுப்பேற்றுக் கொள்ளும். ஆனால் தனியார் ஆலைகளில் அது போன்ற எந்த ஒரு வசதியும் இல்லை என்றார்.